தமிழ் இருக்கையும் , முன்னெடுப்புக்களும்

தமிழ் இருக்கை என்றால் என்ன ?
பல்கலைகழகங்களில் ஒரு துறை தொடர்பான விடயத்தை கற்பிக்க பீடங்களை அமைப்பார்கள் அல்லவா ? அது போன்ற ஒரு ஒதுக்கீடு தான் இந்த இருக்கை.வெறும் கற்றல் கற்பித்தலுக்கு மட்டுமல்ல  அதையும் தாண்டி குறித்த துறை தொடர்பான ஆய்வுகள் ,மாநாடுகளை இவிருக்கை முன்னெடுக்கும்.இதற்கான விதை இடப்பட்டு அதற்கான முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
அமெரிக்காவில் இருக்கும்.மருத்துவ நிபுணரான விஜய் ஜானகிராமனும் பேசிக்கொண்டபோது ஹாவார்டில் தமிழ் இருக்கை ஒன்றை அமைக்கும் எண்ணம் உருவானது. இதற்காக 6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அறக்கொடையாகப் பெறப்பட்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை வெற்றியடைந்தது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து லண்டன் பல்கலைக்கழகத்திலும் , டொரோண்டோப் பல்கலைக்கழகத்திலும்  தமிழ் இருக்கையை அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

-எமக்கு என்றொரு நாடு இல்லை.அதனால் நம் பழமையும்,பெருமையும் அழிவதிலிருந்து காப்பதில் இந்த இருக்கைகள் பெரும் பங்காற்றப்போகிறது என விளக்கங்கள் கூறப்படுகிறது.நன்று.

ஆனால், புலம்பெயர்நாட்டிலும் சரி,தமிழகத்திலும் சரி இன்று தமிழ் கற்போர்,பேசுவோர் எண்ணிக்கை  பிள்ளைகள் ,பெரியோர் மத்தியில் மிக வேகமாக சரிந்து வருவது அனைவரும் அறிந்ததே.இதற்கு காரணம்,தமிழில் பேசினால் படியாதவன் என்று அடுத்தவர் கருதிவிடுவர் என்ற தாழ்வு மனப்பான்மையும் காலம் காலமாக பெரியோர்கள் தீனி போட்டு வளர்த்த அந்நிய மோகமும் எனலாம்.

அண்மையிலும் கூட ஒரு 100 வீதம் முது தமிழர் கொண்ட சபையில் பேச வந்தவர்

''எனக்கு ஆங்கிலமும் பேசமுடியும்,தமிழிலும் பேசமுடியும் [என ஆங்கிலத்திற்கு முதலிடம் கொடுத்தவர்] எம் மொழியில் பேசுவது'' என சபையினரை வினவி தான் ஆங்கிலத்திலும் சளைத்தவரல்ல சபைக்கு புரியவைத்துக்  கேட்டார். சபையிலிருந்து ''தமிழ்'' என்று பதில்வரவே அவரது அடுத்த கேள்வி தமிழை அந்நியப்படுத்தியதுடன் ,அவமானப்படுத்தியதாகவே தோன்றியது. அதாவது ''தமிழில் நான் பேசுவது உங்களுக்கு புரியுமோ'' என்று தமிழில் பிறந்து,தமிழில் வளர்ந்த அந்த முதியோர்களை  நோக்கிக் கேடடார். இது ஒரு உதாரணம்.

இப்படி டொரோண்டோவில் பல தமிழ் நிகழ்வுகள் அறிவித்தல்கள் 1,2 வேற்றினத்தார் இருப்பதினைச் சாட்டி ஆங்கிலத்திலேயே  நடைபெறுகின்றன.

நான் ஒரு சீன நாட்டவரின் நிகழ்வுக்கு சீன நண்பரின் அழைப்பினை ஏற்று சென்றபோது,அங்கும் முன்வரிசையில் வெள்ளை நிற அரசியல்வாதிகள் இருந்தனர்.ஆனால் மேடையில் ஒரு ஆங்கில வார்த்தை இடம்பெறவில்லை. அவ் அரசியல் வாதிகளுடன் ஒரு சீனப் பெண்மணி இருந்து ஆங்கிலத்தில் விளங்கப் படுத்திக்கொண்டிருந்தார்.இது ஒரு உதாரணம் அவர்கள் மொழி வளரவும் வாழவும் காரணம் ஆகும். அவர்கள் சந்திக்கும் இடங்களில் அவர்கள் மொழியில் தான் பிள்ளைகள் உரையாடுகிறார்கள்.

ஆனால் எம் பெரியோர்கள் எம்பிள்ளைகளின் முன் தமிழை பல் வேறு சந்தர்ப்பங்களிலும் இப்படியாக ஒதுக்கி,ஒதுக்கிக் கொச்சைப் படுத்தியே  பிள்ளைகளுக்கு அதில் அருவருப்பினை ஏற்படுத்திவிட்டனர்.

ஆங்கிலம் தெரிந்தவனும் தனித் தமிழில் கதைத்தால் குறைத்து மதிக்கும் தமிழ் சமுதாயத்திற்கு ,தமிழை அடுத்த சந்ததி கற்கவிடாது,பேசவிடாது தடுக்கும் தமிழ் சமுதாயத்திற்கு,தாய் மொழியினை அந்நியப்படுத்தும் சமுதாயத்திற்கு  தமிழ் இருக்கை என்பது எதற்காக என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.

எனது கருத்து ,தமிழின் இருக்கைக்கு எதிரானதல்ல. தமிழரோடு தமிழரைத்  தாய் மொழியில் பேச அனுமதியுங்கள். முதலில் உங்கள் நாவினில் தமிழை இருக்கை செய்யுங்கள்.தமிழில் பேசுவதனால் நீங்கள் கல்விக்கூடம் போனதில்லை என்று மற்றவர்கள் எண்ணுவார்கள்  என்ற தப்பெண்ணெங்களைக் களையுங்கள். அதுவே எம்போன்றவர்களின்  கோரிக்கை.


உங்கள் நாவில் தமிழ் இருக்கை இல்லாமல் பல்கலைக்கழகங்களில் அது இருக்கை செய்து என்ன பயன்?சிந்தியுங்கள்!
வாரி வழங்கி தமிழையும் ,தமிழரையும் வாழவைப்போம்.
-செ .மனுவேந்தன் 

0 comments:

Post a Comment