நான்மணிக்கடிகை/08/வாழ்க்கை உண்மைகளை வெளிக்காட்டும்..

 சங்ககால இலக்கியங்களில், பதினெண் கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான 'நான்மணிக்கடிகை' என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் 'நான்மணிக்கடிகை' எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார்.இவரின் காலம் கி.பி. 200 க்கு முன்னர் ஆகும்.

 …..தொடர்கிறது....

 


⇴⇴⇴⇴⇴⇴⇴36

நகை இனிது, நட்டார் நடுவண்; பொருளின்

தொகை இனிது, தொட்டு வழங்கின்; தகை உடைய

பெண் இனிது, பேணி வழிபடின்; பண் இனிது

பாடல் உணர்வாரகத்து.

நண்பரிடத்தில் முகமலர்ச்சி தளும்பும். வறிஞர்களுக்கு வழங்குவதால் செல்வக்குவியல் இன்பம் தரும். கணவனின் கருத்திற்கு ஏற்ப செயல்படுவதால் பெண்கள் இனியராவர். பாடலுணர்வாரிடத்துப் பண் இனிமை தரும்.

 

⇴⇴⇴⇴⇴⇴⇴37

கரப்பவர்க்குச் செல்சார் கவிழ்தல்; எஞ் ஞான்றும்

இரப்பவர்க்குச் செல்சார் ஒன்று ஈவோர்; பரப்பு அமைந்த

தானைக்குச் செல்சார் தறுகண்மை; ஊன் உண்டல்

செய்யாமை, செல்சார் உயிர்க்கு.

இல்லையென்று பொருள்களை ஒளிப்பவர்கள் இரப்பவர்களைக் கண்டால் முகம் கவிழ்வார். இரப்பவர்களுக்கு ஈகைக் குணம் உடையவரே பற்றுக் கோடாவர். பரபரப்புள்ள சேனைகளுக்கு வீரமே ஒரு பற்றுக்கோடு. ஊன் உண்ணாமல் இருத்தல் அருளொழுக்கத்தோடிருக்கும் உயிர்களுக்குப் பற்றுக்கோடாகும்.

 

⇴⇴⇴⇴⇴⇴⇴38

கண்டதே செய்பவாம், கம்மியர்; உண்டு எனக்

கேட்டதே செய்ப, புலன் ஆள்வார்; வேட்ட

இனியவே செய்ப, அமைந்தார்; முனியாதார்

முன்னியவே செய்யும், திரு.

கம்மாளர் தாம் கண்ணால் கண்ட பொருள்களைப் போன்றே அணி செய்வர். அறிஞர் கல்வி கேள்விகளால் தெளிந்தவற்றையே செய்வர். சான்றோர் பிறர் விரும்புவதில் இனிமையானவற்றையே செய்வர். எளியவர்களையும் சினவாத பெரியோர்கள் கருதியவற்றைத் திருமகள் முடித்து வைப்பாள்.

 

⇴⇴⇴⇴⇴⇴⇴39

திருவும் திணை வகையான் நில்லா; பெரு வலிக்

கூற்றமும் கூறுவ செய்து உண்ணாது; ஆற்ற

மறைக்க மறையாதாம், காமம்; முறையும்

இறை வகையான் நின்றுவிடும்.

குடிவகைக்கு ஏற்ப செல்வம் நில்லாது. கூற்றுவான் தான் உண்ணப்படுகின்றவன் சொல்பவற்றைக் கேட்கமாட்டான். மறைத்தாலும் காமம் மறையாது. அரசனது போக்கிற்கு ஏற்ப ஆட்சி முறை அமையும்.

 

⇴⇴⇴⇴⇴⇴⇴40

பிறக்குங்கால் 'பேர்' எனவும் பேரா; இறக்குங்கால்,

'நில்' எனவும் நில்லா; - உயிர் எனைத்தும் நல்லாள்

உடம்படின், தானே பெருகும்; கெடும் பொழுதில்,

கண்டனவும் காணா கெடும்.

உயிர்கள் பிறக்கும் போது உடலை நீங்குக என்றால் நீங்காது. இறக்கும் போது உயிரை நில் என்றாலும் நிற்காது. திருமகள் அருள் கூடும் போது செல்வம் பெருகும். திருமகள் நம்மை விட்டு நீங்கும்போது செல்வம் தானே நீங்கிவிடும்.

 

'நான்மணிக்கடிகை' தொடரும்....


ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக👉

Theebam.com: 'நான்மணிக்கடிகை' /01/வாழ்க்கை உண்மைகளை வெளிப்படு...

 

தேட‌ல்:

நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு, பாழ், குட்டம், ஆக்கம், இலக்கியங்கள், அதிர்ப்பின், அதிர்க்கும், நான்மணிக்கடிகை, கலங்கினால், பதினெண், கீழ்க்கணக்கு, இன்மை, தான், அறிவு, பாழானது, நிலை, உடம்பு, மனைவி, நண்பர்கள், கற்றான், அவைக், கல்வி, சங்க, செல்லும், விடுவான், போது, இறுவாய்த்து, இறுவாய, அழியும்.


0 comments:

Post a Comment