மொழியின் தோற்றம்: - 05

மொழி எப்போது தொடங்கியது

எவ்வாறு உருவானது?

[/ Origin of Language: 

When Did It Start and

 How Did It Evolve?]

 


 எந்த வொரு மக்களின் புராணத்திலும் அல்லது இதிகாசத்திலும்  மொழியின் தோற்றம் பற்றிய நேரடியான அல்லது மறைமுகமான எதாவது சில கட்டுக் கதைகள் உள்ளன. இந்த கட்டுக்  கதைகள் பொதுவாக மொழியின் தோற்றத்தை மனிதர்களின் தோற்றத்துடன் இணைக்கின்றன. மொழியின் தோற்றத்தின் தர்க்கரீதியான கோட்பாடு நாகரிகத்தின் வளர்ச்சியின் ஆரம்ப   கட்டங்களில் யாரோ ஒருவர் அல்லது சிலர் மூலம் மதத்துடன் ஆண்டவனுடன் இணைத்து கதைகளாக போதிக்கப் பட்டன. விவிலியம், இந்து வேதம் போன்ற மத சார்பான நூல்கள் மூலமும் மற்றும் பல மாநிலங்களில் அல்லது நாடுகளில் புராண வரலாறாக தோன்றி, இது அந்த மக்களின் நம்பிக்கையால், அதிகாரத்தால் புனிதப்படுத்தப் பட்டது. என்றாலும் சீனாவின்  கன்பூசியவாதம் அல்லது  கன்பூசியசின் மெய்விளக்கியல் [Confucianism] செல்வாக்கு மிக்கதாக இருந்தாலும், அவை  இறையியல் தன்மை கொண்டவையல்ல.  இது ஒரு கருத்தியல் கோட்பாடு. ஆனால் மொழியின் தோற்றம் குறித்த இந்த கோட்பாட்டை அறியாமல், நாம் மற்ற கோட்பாடுகளை படிப்பது பொருத்தமாக இருக்காது என்று எண்ணுகிறேன்.

 

இன்று ஆன்மீகக் கொள்கையைக் குறிக்க “கடவுள்”, “சின்னங்கள்” [logos], “தாவோ” [ தாவோயியம் / ஒரு சீன சமய தத்துவக் கோட்பாடு / TAO], “சொல்” [கடவுளின் வார்த்தை / திரித்துவத்தின் இரண்டாவது நபர் ( second person of the Trinity / இயேசுவில் அவதாரம்) / யோவான் / John 1:1 : ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை  தேவனாயிருந்தது] என்ற சொற்கள் பயன்படுத்தப் படுவதை அறிவீர்கள் [The terms "God", "logos", "tao", and "word" are used to refer to spiritual doctrine].  ஒவ்வொரு நாளும், படைப்பு கடவுளின்  கைகளால் அல்ல, மாறாக அவருடைய வார்த்தையால் நிறைவேற்றப் பட்டது என்பதை பைபிளில் காண்கிறோம். கன்பூசியனிசம் மற்றும் இந்து மதத்தை பார்த்தாலும் அங்கும் வெவ்வேறு சொற்களில் இருந்தாலும், அடிப்படையில் ஒரே மாதிரியானது என்பதை உணர்வீர்கள்.

 

சற்று விபரமாக கிறிஸ்த்தவ மதத்தை பார்த்தால்,

"அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை. ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் உலகின் கடைசி   வரைக்கும் செல்லுகின்றன;"

 

[They have no speech, they use no words; no sound is heard from them. Yet their voice goes out into all the earth, their words to the ends of the world]

 

என சங்கீதம் [Psalms] 19:3 & 19:4 கூறுவதுடன், தெய்வீக படைப்பாற்றலின் செயல்களில் ஒன்றான மனிதனின் படைப்பை  செய்த கடவுள், அங்கு மனிதனுக்கு மொழியையும் படைத்தான் என்பதை, ஆதியாகமம் [Genesis] 2:20 இல், முதல் மனிதர் ஆதாம், கடவுள் தனக்கு அனுப்பும்  சகலவித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகல விதக் காட்டு மிருகங்களுக்கும் பெயர்களைக் கொடுப்பதில் இருந்து அறிகிறோம். அது மட்டும் அல்ல, உலக வரலாற்றில், உலகை படைக்கும் பொழுது, கடவுள் பேசுவதை முதல் தரம் பார்க்கிறோம். உதாரணமாக,  ஆதியாகமம் [Genesis] 1:3 இல்,

 

தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று [And God said, “Let there be light,” and there was light]

என்ற பேச்சில் இருந்து அறிகிறோம்.

 

இந்து சமயத்தில், ரிக்வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் நூற்றி இருபத்தைந்தாவது சூக்தமாக உள்ளது எட்டு பாடல்கள் கொண்ட தேவி சூக்தம். இதனை இயற்றியவர் அம்ப்ருணர் என்ற   ரிஷியின் மகளாகிய வாக் [Vāc] என்ற ரிஷிகா (பெண் ரிஷி). இவரை வாக் தேவி என்றும் கூறுவார். இவரே இந்து வேதத்தில், பேச்சு மொழியின் தெய்வமாக [goddess of speech] ஆக கருதப் படுகிறார். இவர் பிற்கால இந்து புராணக் கதையில் சரஸ்வதியுடன் இணைக்கப் பட்டார். உதாரணமாக ரிக் வேதம் மண்டலம் 10, அதிகாரம் (சூக்தம்) 125, பாடல் (சுலோகம்) 4 [Rig-Veda, Book 10 / HYMN CXXV.]  இல்,

 

"மானுடர் உண்பதும் காண்பதும் சுவாசிப்பதும் சொல் கேட்பதும் எல்லாம் என்னால். அதை அறியார் ஆயினும் அவர்கள் என் உள் உறைபவரே. சிரத்தையுடைய அன்பனே சொல்கிறேன்   கேள்."

[Through me alone all eat the food that feeds them,- each man who sees, breaths, hears the word outspoken. They know it not, but yet they dwell beside me. Hear, one and all, the truth as I declare it.]

 

என்கிறார். 'பேச்சுக் கலையின் தேவதை' எனப் பொருள்படும் ‘வக் தேவி' என்ற பெயராலும் அழைக்கப்படும், கலைமகளின் கையிலிருக்கும் ஜபமாலைக்கு அட்சமாலை என்று பெயர். இம்மாலை சமஸ்கிருதத்தின் எழுத்துகளின் எண்ணிக்கைக்கு சமமாக ஐம்பத்தொன்று மணிகளை உடையதாக உள்ளது. மொழி வடிவில் இம்மாலை இருப்பதாக கூறப்படுவதையும் கவனிக்க. சிவபெருமானின் உடுக்கை ஒலியில் [தமருக ஒலியில்] இருந்து பிறந்தது தான் தமிழும், சமஸ்கிருதமும் என்றும் அதை சிவன் பாணினிக்கும் அகத்தியருக்கும் கொடுத்தார் என நம்நாட்டில்  நம்புபவர்கள் உண்டு.

 

இஸ்லாம் மதத்தை எடுத்தால், அங்கும் குர்ஆன் [Qur’an] 30:22 இல்,

"மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும்.  நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன."

[And of His Signs is the creation of the heavens and the earth and the diversity of your tongues or  of your languages and colours. Indeed there are Signs in this for the wise.]

என்கிறது.

ஏறத்தாழ 26,000 ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிரிக்காவிலிருந்து அந்தமான் தீவுகளில் குடியேறிய, வெளி உலகத்துடன் பெரிதாக தொடர்பற்ற அந்தமானியப் பழங்குடிகள், இவர்களில்   சென்டினல் பழங்குடி மக்கள் அறுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அந்தமானில் வாழ்ந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். செண்டினல் பழங்குடி மக்கள் பேசு மொழி, மற்ற   அந்தமான் பழங்குடி மக்கள் பேசும் மொழிகளுக்கும் அதிக வேறுபாடு உள்ளது. செண்டினல் இன மக்கள் ஆப்பிரிக்காவின் கருப்பின மக்களைப் போல உருவமும் நிறமும் கொண்டுள்ளனர்  மற்றும் குறைந்தது 40,000 ஆண்டுகளுக்கு முன்னர், ஆப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலிய குடியேறிய பழங்குடி மக்களிடமும் நிலவும் மொழி தோன்றிய புராண கதைகள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றன. உதாரணமாக, மத்திய அந்தமானின் தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதி பழங்குடியினரின்  [the tribe inhabiting the south and south-eastern portion of middle Andaman]

புராண கதையின் படி, 'புளுக'(Pūluga or Puluga) படைப்பு கடவுள் ஆவார். படைப்பின் போது கடவுளால் அவர்களுக்கு கொடுக்கப் பட்ட கட்டளைகளை, அவர்கள் அசட்டையாக  கவனிக்காமல் இருப்பதை கண்டு, அவர் மக்களிடம் போவதை நிறுத்தி கொண்டார். அதன் பிறகு எந்த வித முன்னறிவித்தலும் இன்றி, பேரழிவு வெள்ளம் [பிரளயம் / devastating flood] ஒன்றை  உண்டாக்கினார். அதில் தப்பிப் பிழைத்த முதல் ஆணுக்கும் பெண்ணுக்கும் அவர் மொழி கொடுத்தார் என்று நம்புகிறார்கள் [language as being given by the god Pūluga to the first man and woman at   their union  following a great deluge].

 

 

தெற்கு ஆஸ்திரேலியாவில், வாழும் பழங்குடி மக்களிடம் நிலவும் ஒரு புராண கதையின் படி [In the Aboriginal mythology of the Encounter Bay tribe, in Australia, Wurruri is an old woman who appears in the  myth of how the different languages came about], இரவில் தீயை சுற்றி குளிர்காய்ந்து தூங்கிக் கொண்டு மற்றவர்கள் இருக்கையில், அவர்களின் துன்பத்தில் பொல்லாத மகிழ்ச்சி அடையும்   வ்உர்ருரி [Wurruri] என்ற ஒரு கிழவி தனது பொல்லால் தீயை சிதறடிப்பது அவரின் வழமையாக இருந்தது. எனவே, அவர் இறந்த பொழுது ஒவ்வொரு பழங்குடி ஆண்களும்  அவள் மறைந்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் அவளின் உடலின் பகுதிகளை உண்ண அங்கு வந்தனர்.முதலாவது பழங்குடி ஆண்கள் அவரின் சதையை உண்டனர். உடனே நன்றாக புரியும்படி ஒரு மொழியில் பேச ஆரம்பித்தனர் [The Raminjerar were the first who fell upon the corpse and began eating the flesh, and immediately began to speak intelligibly. Each tribe derives its name from the district to which it   belongs, and which they claim as their own property, as Ramong, the district belonging to the Raminjerar, the affix injeri (plural injerar) having the same signification as "er" in English, as Londoner,]. அதை தொடர்ந்து    இரண்டாவது பழங்குடி ஆண்கள் குடலையும், மூன்றாவது பழங்குடி ஆண்கள் மிகுதியையும் உண்டனர். இவர்கள் இரு பழங்குடிகளும் முதலாவது பழங்குடியில் இருந்து சற்று வேறுபட்ட, இரு வேறு மொழியில் உடன் பேசினார் என்று அந்த கதை கூறுகிறது.

 

 

இவ்வாறு பல கதைகள் மதங்களிலும் மற்றும் பழங்குடி மக்களிடமும்  நிலவுகின்றன. என்றாலும் இவைகள் கட்டுக்கதைகள் அல்லது நம்பிக்கைகள் மட்டுமே !. இனி மற்ற கருதுகோள்களை ஓரளவு விரிவாக, ஆனால் சுருக்கமாக பார்ப்போம்.


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] / பகுதி: 06 வாசிக்க அழுத்துக👉 Theebam.com: மொழியின் தோற்றம்:-06:

ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக👉 Theebam.com: மொழியின் தோற்றம்: - 01

0 comments:

Post a Comment