நான்மணிக்கடிகை/14/வாழ்க்கை உண்மைகளை வெளிக்காட்டும்..

 

சங்ககால இலக்கியங்களில், பதினெண் கீழ் கணக்கு நூல்களில் ஒன்றான 'நான்மணிக்கடிகை' என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் 'நான்மணிக்கடிகை' எனப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார்.இவரின் காலம் கி.பி. 200 க்கு முன்னர் ஆகும்.


தொடர்ச்சி..

66-👇👇👇

பின்னவாம் பின் அதிர்க்கும் செய்வினை; என் பெறினும்

முன்னவாம், முன்னம் அறிந்தார்கட்கு; என்னும்

அவா ஆம், அடைந்தார்கட்கு உள்ளம்; தவாவாம்,

அவா இல்லார் செய்யும் வினை.   

:-ஒரு செயலைச் செய்யத் தொடங்கு முன் ஆராயாதவர்களுக்கு அதன் துன்பங்கள் தொடங்கிய பின் தெரியும். ஆராய்கின்றவர்களுக்கு அவை தொடங்கும் முன்னமேயே தெரியும். ஒரு பொருளை விரும்பி அடைந்தவர்களுக்குப் பொருளின் மீது மேலும் மேலும் அவா உண்டாகும். பற்றில்லாதவர்கள் செய்யும் அறச் செயல் ஒரு போதும் கெடாது.

 

67-👇👇👇

கைத்து இல்லார் நல்லவர், கைத்து உண்டாய்க் காப்பாரின்;

வைத்தாரின் நல்லர், வறியவர்; பைத்து எழுந்து

வைதாரின் நல்லர், பொறுப்பவர்; செய்தாரின்

நல்லர் சிதையாதவர்.  

:-செல்வமிருந்தும் அச் செல்வத்தால் பயனடையாதவர்களை விட செல்வமில்லாதவர்கள் நல்லவர்கள். செல்வத்தைச் சேர்த்துவைத்து இழப்பவரை விட வறியவர் மிக நல்லவர். சினந்து வைபவர்களை விட அதனைப் பொறுப்பவர் மிகவும் நல்லவர். பிறருக்கு உதவியவரை விட செய்ந்நன்றியை மறவாதவர் மிக நல்லவர்.

 

68-👇👇👇

மகன் உரைக்கும், தந்தை நலத்தை; ஒருவன்

முகன் உரைக்கும், உள் நின்ற வேட்கை; அகல் நீணர்ப்

புலத்து இயல்பு புக்கான் உரைக்கும்; நிலத்து இயல்பு

வானம் உரைத்துவிடும்.       

:-தந்தையின் நன்மையைப் புதல்வன் தனது இயல்பால் அறிவிப்பான். ஒருவனது மனவிருப்பத்தை அவனது முகக்குறிப்பே அறிவித்துவிடும். வயலின் தன்மையை நிலக்கிழவன் அறிவித்துவிடுவான். நிலத்துமக்கள் இயல்பை அந்நிலத்தில் பெய்யும் மழையின் நிலை அறிவித்துவிடும்.

 

69-👇👇👇

பதி நன்று, பல்லார் உறையின்; ஒருவன்

மதி நன்று, மாசு அறக் கற்பின்; நுதி மருப்பின்

ஏற்றான் வீறு எய்தும், இன நிரை; தான் கொடுக்கும்

சோற்றான் வீறு எய்தும், குடி.        

:-பலரும் நிறைந்து ஒன்றுபட்டு வாழ்வாரானால் ஊர் நன்றாகும். ஐயந்திரிபறக் கற்பவனால் அவன் அறிவு நன்றாகும். ஆனிரைகள் (பசுக்கள்) கூர்மையான கொம்புகளையுடைய ஏறுகள் உடனிருத்தலால் சிறப்படையும். ஏழைகளுக்கு உணவளிப்பதால் ஒருவனது குடி மேலோ ங்கும்.

 

70-👇👇👇

ஊர்ந்தான் வகைய, கலின மா; நேர்ந்து ஒருவன்

ஆற்றல் வகைய, அறம் செயல்; தோட்ட

குளத்து அனைய, தூம்பின் அகலங்கள்; தம்தம்

வளத்த அனைய, வாழ்வார் வழக்கு.       

:-குதிரைகள் சவாரி செய்வானது திறத்துக்கு ஒத்தன. ஒருவனுடைய அறச்செயல்கள் அவனது ஆற்றலுக்கு ஏற்ப அமைவன. குளத்தின் அளவிற்கு ஏற்ப நீர்க்கால்கள் அமையும். அவரவர் வருவாய்க்கு ஏற்ப வாழ்க்கை அமையும்.

 

நான்மணிக்கடிகை தொடரும்…..


ஆரம்பத்திலிருந்து வாசிக்க அழுத்துக👉

Theebam.com: 'நான்மணிக்கடிகை' /01/வாழ்க்கை உண்மைகளை வெளிப்படு...

 

தேடல் தொடர்பான தகவல்கள்:

நான்மணிக்கடிகை - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், நல்லவர், உரைக்கும், நான்மணிக்கடிகை, நல்லர், ஒருவன், ஏற்ப, பதினெண், கீழ்க்கணக்கு, அறிவித்துவிடும், நன்று, குடி, அனைய, அமையும், வகைய, நன்றாகும், எய்தும், அவனது, வீறு, பொறுப்பவர், செய்யும், இல்லார், பின், சங்க, தெரியும், மேலும், இயல்பு, வறியவர், கைத்து, செயல், ஒருவனது

0 comments:

Post a Comment