திரிகடுகம் -வாழ்க்கை செம்மை பெற....(11)

[திரிகடுகம் என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் நல்லாதனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். திரி-மூன்று, கடுகம்-காரமுள்ள பொருள். திரிகடுகம் என்பது மூன்று மருந்துப் பொருட்களைக் குறிக்கும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள மூன்று நீதிகள் மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் திரிகடுகம் எனப்படுகிறது. 101 வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ,கடைச்சங்க காலத்தில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது.]

திரிகடுகம் தொடர்கிறது....


பாடல் - 51

தூர்ந்து ஒழுகிக்கண்ணும், துணைகள் துணைகளே;

சார்ந்து ஒழுகிக்கண்ணும், சலவர் சலவரே;

ஈர்ந்த கல் இன்னார் கயவர்; - இவர் மூவர்,

தேர்ந்தக்கால், தோன்றும் பொருள்.

 

விளக்கம்:

வறுமையிலும் உதவுபவர் உறவினரேயாவார், கருத்துக்கு இணங்கி நடந்தவிடத்தும் பகைவர் பகைவரே ஆவர். துன்பம் செய்யும் கயவர்கள் பிளக்கப்பட்ட கல்லுக்கு ஒப்பாவார்கள். இவர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

 

பாடல் – 52

கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம்; காமுற்ற

பெண்ணுக்கு அணிகலம் நாண் உடைமை; நண்ணும்

மறுமைக்கு அணிகலம் கல்வி; - இம் மூன்றும்

குறியுடையோர்கண்ணே உள.

 

விளக்கம்:

கண்களுக்கு அணிகலம் கண்ணாடுதல், பெண்ணுக்கு அணிகலம் நாணம், மறுபிறப்புக்கு அணிகலன் கல்வி அறிவு. இம்மூன்றும் ஆராயும் இயல்புடையாரிடத்தில் உள்ளன.

 

பாடல் - 53

குருடன் மனையாள் அழகும், இருள் தீரக்

கற்று அறிவில்லான் கதழ்ந்துரையும், பற்றிய

பண்ணின் தெரியாதான் யாழ் கேட்பும், - இம் மூன்றும்

எண்ணின், தெரியாப் பொருள்.

 

விளக்கம்:

குருடனுக்கு மனைவியின் அழகும், நூலைக் கற்றுப் பொருளை அறியாதவன் சொல்லுகின்ற சொல்லும், பண்களைத் தெரியாதவன் யாழின் இசையைக் கேட்பதும், இம்மூன்றும் ஆராய்ந்து பார்த்தால் யாருக்கும் பயன்படாது.

 

பாடல் - 54

தன் பயம் தூக்காரைச் சார்தலும், தான் பயவா

நன் பயம் காய்வின்கண் கூறலும், பின் பயவாக்

குற்றம் பிறர் மேல் உரைத்தலும், - இம் மூன்றும்

தெற்றெனவு இல்லார் தொழில்.

 

விளக்கம்:

தனக்கு உதவி செய்யாதவரைச் சேர்தல், சினம் கொண்ட போது பயன்படாத சொற்களைப் பேசுவது, குற்றங்களைப் பிறர் மேல் சொல்லுதல் ஆகியவை அறிவில்லாதவர் செயலாகும்.

 

பாடல் - 55

அரு மறை காவாத நட்பும், பெருமையை

வேண்டாது விட்டு ஒழிந்த பெண்பாலும், யாண்டானும்

செற்றம் கொண்டாடும் சிறு தொழும்பும், - இம் மூவர்

ஒன்றாள் எனப்படுவார்.

 

விளக்கம்:

மறைமொழியை வெளிப்படுத்தாத நட்பும், பெருமைக் குணத்தை விரும்பாத தலைவனும், தர்மத்தின் நீங்கிய பெண்ணும் ஒற்றர்கள் என்று சொல்லப்படுவார்.

 

திரிகடுகம் தொடரும்.... ››››››

 👈👈👈👉👉👉

0 comments:

Post a Comment