திருக்குறள்...-/47/-தெரிந்து செயல்வகை


திருக்குறள் தொடர்கிறது


M

 

47. தெரிந்து செயல்வகை

குறள் 461:

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்

ஊதியமுஞ் சூழ்ந்து செயல்.

மு.வ உரை:

(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும் அழிந்த பின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒரு செயலைச் செய்யும்போது வரும் நட்டத்தையும், பின் விளைவையும் பார்த்து, அதற்குப்பின் வரும் லாபத்தையும் கணக்கிட்டுச் செய்க.

கலைஞர் உரை:

எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறதே ஒரு செயலில் இறங்க வேண்டும்.

English Explanation:

Let a man reflect on what will be lost, what will be acquired and (from these) what will be his ultimate gain, and (then, let him) act.

 

குறள் 462:

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கரும்பொருள் யாதொன்று மில்.

மு.வ உரை:

ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப்பார்த்துச் செய்கின்றவர்க்கு அறிய பொருள் ஒன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

தாம் தேர்ந்துகொண்ட நிருவாகச் சுற்றத்தோடு ஒரு செயலை ஆராய்ந்து திட்டமிட்டுச் செய்பவர்க்குச் செய்ய முடியாத செயல் என்று எதுவும் இல்லை.

கலைஞர் உரை:

தெளிந்து தேர்ந்த நண்பர்களுடன், சேர்ந்து, ஆற்ற வேண்டிய செயலை ஆராய்ந்து, தாமும் நன்கு சிந்தித்துச் செய்தால் ஆகாதது ஒன்றுமில்லை.

English Explanation:

There is nothing too difficult to (be attained by) those who, before they act, reflect well themselves, and thoroughly consider (the matter) with chosen friends.

 

குறள் 463:

ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை

ஊக்கா ரறிவுடை யார்.

மு.வ உரை:

பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது கையில் உள்ள முதலை இழந்து விடக் காரணமாச் செயலை அறிவுடையோர் மேற்க்கொள்ள மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:

வரும் லாபத்தை எண்ணி, இருக்கும் முதலையும் இழந்துவிடுவதற்கு ஏற்ற செயலை அறிவுள்ளவர் செய்யமாட்டார்.

கலைஞர் உரை:

பெரும் ஆதாயம் கிட்டுமென்று எதிர்பார்த்துக் கை முதலையும் இழந்து விடக்கூடிய காரியத்தை அறிவுடையவர்கள் செய்யமாட்டார்கள்.

English Explanation:

Wise men will not, in the hopes of profit, undertake works that will consume their principal.

 

குறள் 464:

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்ஏதப்பா டஞ்சு பவர்.

மு.வ உரை:

இழிவு தருவதாகியக் குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் (இன்ன ஊதியம் பயிக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:

தனக்கு அவமானம் என்னும் குற்றம் வரும் என்று பயப்படுபவர், நம்பிக்கை இல்லாத செயலைச் செய்யத் தொடங்கமாட்டார்.

கலைஞர் உரை:

களங்கத்துக்குப் பயப்படக் கூடியவர்கள்தான் விளைவுகளை எண்ணிப் பார்த்து அந்தக் களங்கம் தரும் காரியத்தில் இறங்காமல் இருப்பார்கள்.

English Explanation:

Those who fear reproach will not commence anything which has not been (thoroughly considered) and made clear to them.

 

குறள் 465:

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்

பாத்திப் படுப்பதோ ராறு.

மு.வ உரை:

செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத்தொடங்குதல், பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும்.

சாலமன் பாப்பையா உரை:

முறையாகத் திட்டமிடாது ஒரு செயலைத் தொடங்குவது, வளரும் நிலத்திலே எதிர் அணியினரை நிலைபெறச் செய்யும் வழியாகும்.

கலைஞர் உரை:

முன்னேற்பாடுகளை முழுமையாக ஆராய்ந்து செய்யாமல் பகைவரை ஒடுக்க முனைவது அந்தப் பகைவரின் வலிமையை நிலையாக வளர்க்கும் வழியாக ஆகிவிடும்.

English Explanation:

One way to promote the prosperity of an enemy, is (for a king) to set out (to war) without having thoroughly weighed his ability (to cope with its chances).

 

குறள் 466:

செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும்.

மு.வ உரை:

ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான், செய்யத்தக்க செயல்களை செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.

சாலமன் பாப்பையா உரை:

செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும் அழிவு வரும்.

கலைஞர் உரை:

செய்யக் கூடாததைச் செய்வதால் கேடு ஏற்படும்; செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டாலும் கேடு ஏற்படும்.

English Explanation:

He will perish who does not what is not fit to do; and he also will perish who does not do what it is fit to.

 

குறள் 467:

எண்ணித் துணிக கருமந் துணிந்தபின்

எண்ணுவ மென்ப திழுக்கு.

மு.வ உரை:

(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும், துணிந்த பின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம்.

கலைஞர் உரை:

நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு.

English Explanation:

Consider, and then undertake a matter; after having undertaken it, to say "We will consider," is folly.

 

குறள் 468:

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று

போற்றினும் பொத்துப் படும்.

மு.வ உரை:

தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று(அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகிவிடும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒரு செயலை முடிக்கும் வழி அறியாது தொடங்கினால், பலர் சேர்ந்து துணை செய்தாலும், அச்செயல் கெட்டுப் போகும்.

கலைஞர் உரை:

எத்தனை பேர்தான் துணையாக இருந்தாலும் முறையாகச் செய்யப்படாத முயற்சி இறுதியில் முடங்கிப் போய்விடும்.

English Explanation:

The work, which is not done by suitable methods, will fail though many stand to uphold it.

 

குறள் 469:

நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்

பண்பறிந் தாற்றாக் கடை.

மு.வ உரை:

அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை:

அவர் அவர் குணநலன்களை அறிந்து செயல் ஆற்றாவிட்டால் நல்லது செய்வதிலும் பிழை நேர்ந்து விடும்.

கலைஞர் உரை:

ஒருவருடைய இயல்பைப் புரிந்து கொண்டுதான் நன்மையைக் கூடச் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் அதுவே தீமையாகத் திருப்பித் தாக்கும்.

English Explanation:

There are failures even in acting well, when it is done without knowing the various dispositions of men.

 

குறள் 470:

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடுகொள்ளாத கொள்ளா துலகு.

மு.வ உரை:

தம் நிலையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக்கொள்ளாது, ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:

தன் தகுதிக்குப் பொருந்தாத வழிமுறைகளைச் செய்தால் மக்கள் அதை இகழ்வர்; அதனால் மக்கள் இகழாத வழிமுறைகளை எண்ணிச் செய்ய வேண்டும்.

கலைஞர் உரை:

தம்முடைய நிலைமைக்கு மாறான செயல்களை உயர்ந்தோர் பாராட்டமாட்டார்கள் என்பதால், அவர்கள் பழித்துரைக்காத செயல்களையே செய்திடல் வேண்டும்.

English Explanation:

Let a man reflect, and do things which bring no reproach; the world will not approve, with him, of things which do not become of his position to adopt.

திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….

✬✬அடுத்த பகுதியை வாசிக்க ... அழுத்துக...

 Theebam.com: திருக்குறள்...-/48/-வலியறிதல்: 

✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக

Theebam.com: திருக்குறள்/01/ : கடவுள் வாழ்த்து

0 comments:

Post a Comment