ஆண்களைவிட பெண்கள் குறைவாக சர்க்கரை சாப்பிட வேண்டும்

- ஏன் தெரியுமா?



டெல்லியில் வசிக்கும் 15 வயது ரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கழுத்து, அக்குள் மற்றும் விரல் மூட்டுகளில் தோலில் கருமை நிற திட்டுக்கள் தோன்றும் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார்.

 

தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெறச் சென்ற போது, அவர் ரியாவை உட்சுரப்பியல் நிபுணரிடம் (endocrinologist) சிகிச்சை பெறுமாறு பரிந்துரைத்தார்.

 

ரியாவை பரிசோதித்தபோது, ​​காலை உணவுக்கு முன் அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு 115 ஆகவும், காலை உணவு சாப்பிட்ட பிறகு 180 ஆகவும் இருந்தது.

 

மருத்துவர்களின் கூற்றுப்படி, காலை உணவுக்கு முன் இரத்த சர்க்கரை 100 வரை இருக்கலாம் என்பதுடன் காலை உணவுக்குப் பிறகு 140 வரை இருப்பது சாதாரண அளவாகக் கருதப்படுகிறது.

 

ரியாவுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் சுரேந்திர குமார் கூறுகையில், "ரியா ஜங்க் ஃபுட் சாப்பிட்டு வந்தார். மேலும் அவரது குடும்பத்தில் சர்க்கரை நோய் இருந்த வரலாறும் இருந்தது. அவள் உடற்பயிற்சி கூட செய்யவில்லை. பெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால், குழந்தைக்கு சர்க்கரை நோய் வர 50% வாய்ப்புள்ளது,” எனத்தெரிவித்தார்.

 

ரியாவுக்கு இன்சுலின் எதிர்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

 

கலிபோர்னியா பல்கலைகழகத்தின் குழந்தை மருத்துவ உட்சுரப்பியல் நிபுணரும், 'சுகர், தி பிட்டர் ட்ரூத்' (Sugar, the Bitter Truth) என்ற நூலின் ஆசிரியருமான, பிரபல அமெரிக்க மருத்துவரான ராபர்ட் லுஸ்டிக் கூறுகையில், பெரியவர்களிடம் மட்டுமே காணப்பட்ட இந்நோய் தற்போது குழந்தைகளிடமும் காணப்படுகிறது என்றார்.

 

குழந்தைகளைப் பாதிக்கும் பெரியவர்களின் நோய்கள்

அவர் கூறும்போது, ​​“இப்போது பெரியவர்களுக்கு ஏற்படும் அதே நோய்களால் குழந்தைகளும் பாதிக்கப்படுவதைக் காணமுடிகிறது. அவர்கள் 2 ஆம் வகை நீரிழிவு, கொழுப்புமிகு ஈரல் போன்ற பாதிப்புக்களுக்கு உள்ளாகின்றனர்.

 

அவரைப் பொறுத்தவரை, 1980-களில் இந்த நோய்கள் பெரியவர்களிடம் மட்டுமே காணப்பட்டன. கொழுப்புமிகு ஈரல் நோய் பொதுவாக மது அருந்துபவர்களுக்கு ஏற்படுகிறது.

 

ஆனால் இப்போது அமெரிக்காவில் 25% குழந்தைகளுக்கு கல்லீரலில் கொழுப்பு பிரச்சனை உள்ளது. குழந்தைகள் மது அருந்துவதில்லை என்ற உண்மையுடன் பொருத்திப் பார்த்தால் இது ஒரு வியப்பூட்டும் தகவலாக உள்ளது.

 

டாக்டர் ராபர்ட் லுஸ்டிக் இது குறித்துப் பேசியபோது, "முன்பெல்லாம் குழந்தைகளுக்கு இப்போது கிடைக்கும் சர்க்கரை சார்ந்த பொருட்களான மிட்டாய் மற்றும் சாக்லேட் போன்ற பொருட்கள் கிடைக்கவில்லை. இப்போது இதெலாம் எளிதாகக் கிடைக்கின்றன,” என்றார்.

 

உடலுக்கு கார்போஹைட்ரேட் ஏன் தேவை?

உணவுப் பொருட்களில் மூன்று கூறுகள் உள்ளன - கார்போஹைட்ரேட்டுகள் (மாவுச்சத்து), கொழுப்புகள் மற்றும் புரதங்கள். மனித உடலுக்கு ஆற்றலுக்காக கார்போஹைட்ரேட்டுகள் தேவை.

 

இந்த கார்போஹைட்ரேட்டுகள் பல வகையான உணவுகளில் இயற்கையாகவே காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் பழங்களில் காணப்படுகின்றன. சர்க்கரை ஒரு கார்போஹைட்ரேட் ஆகும்.

 

சர்க்கரையைத் தவிர, அரிசி அல்லது மாவு போன்ற பிற எளிய கார்போஹைட்ரேட்டுகளும் நம் உடலுக்குள் நுழையும் போது, ​​​​நமது குடல் அவற்றை உடைத்து அதிலிருந்து குளுக்கோஸை பிரித்தெடுக்கிறது.

 

இந்த குளுக்கோஸ் உடலில் எரிபொருளாக செயல்பட்டு இயக்கத்துக்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது.

இன்சுலின் எதிர்ப்பைப் பற்றி விளக்கிய மும்பையைச் சேர்ந்த நீரிழிவு சிகிச்சை மையத்தின் டாக்டர் ராஜீவ் கோவில் மற்றும் டாக்டர் சுரேந்திர குமார் ஆகியோர், இன்சுலின் என்ற ஹார்மோன் நம் உடலில் ஒரு இயக்கியாக செயல்படுகிறது என்று கூறுகிறார்கள். இது சிறுநீரகம் மற்றும் இதயம் உள்ளிட்ட பிற உறுப்புகளின் செல்களுக்கு குளுக்கோஸை எடுத்துச் செல்கிறது.

 

இது குறித்து மேலும் விளக்கியவர்கள், "இன்சுலின் அளவு அதிகரிக்கும் போது அது வேலை செய்வதை நிறுத்துகிறது. அத்தகைய சூழ்நிலையில், குளுக்கோஸ் மற்ற வழிகள் மூலம் நுழைய முயற்சிக்கிறது, இது உயிரணுக்களில் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. அத்தகைய சூழ்நிலையில், குளுக்கோஸ் கொழுப்பு வடிவில் உடலில் சேரத் தொடங்குகிறது, பின்னர் பிரச்சினைகள் தோன்றத் தொடங்குகின்றன,” என்றார்.

 

இதனால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து பல வகையான நோய்கள் உருவாகத் தொடங்குவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இதனால், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய்கள், புற்றுநோய் கூட ஏற்படும் அபாயம் உள்ளது.

சர் கங்காராம் மருத்துவமனையின் உட்சுரப்பியல் மற்றும் வளர்சிதை மாற்றப் பிரிவின் டாக்டர் சுரேந்திர குமார், சர்க்கரை பல வகைகள் இருப்பதாக விளக்குகிறார்.

 

சர்க்கரையைப் பற்றி அவர் பேசுகையில், அது கரும்பிலிருந்து பதப்படுத்தப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இதில் அதிகபட்ச கலோரி மற்றும் இனிப்பு உள்ளது. இது சுக்ரோஸ் என்றும் அழைக்கப்படுகிறது என்றார்.

 

சர்க்கரையின் மற்ற வகைகள் குளுக்கோஸ், லாக்டோஸ், சுக்ரோஸ் மற்றும் பிரக்டோஸ் ஆகும்.

 

பழங்களில் குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் அதிகமாக உள்ளன,” என்கிறார் டாக்டர் சுரேந்திர குமார். பால் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்களில் லாக்டோஸ் காணப்படுகிறது. இதேபோல், தேன் மற்றும் பழங்களில் குளுக்கோஸ் காணப்படுகிறது. அது தீங்கு விளைவிப்பதில்லை.

 

அதே நேரத்தில், பதப்படுத்தப்பட்ட சர்க்கரை, அதாவது சுக்ரோஸ் சேர்க்கப்படும் பொருட்கள், அதிக அளவில் எடுத்துக் கொண்டால், அது தீங்கு விளைவிக்கும்.

 

எவ்வளவு நார்ச்சத்து இருக்க வேண்டும்?

இயற்கையான சர்க்கரை கொண்ட உணவுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

 

ஏனெனில் அவை நமக்கு அதிக ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. பழங்கள் மற்றும் காய்கறிகள் நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளைக் கொண்டிருக்கும் போது, ​​பால் பொருட்களிலிருந்து புரதம் மற்றும் கால்சியம் ஆகியவற்றைப் பெறுகிறோம்.

 

டாக்டர் ராஜீவ் கோவில் பேசியபோது, ​​“இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தாலும், மக்கள் 75% முதல் 80% வரை கார்போஹைட்ரேட் சாப்பிடுகிறார்கள். இந்த அளவுக்கு இதைச் சாப்பிடுவது உலகிலேயே அதிகமானது ஆகும். இங்குள்ள மக்களின் சர்க்கரை அளவும் அதிகமாக உள்ளது," என்கிறார்.

 

உதாரணத்திற்கு, தினை, சோளம் போன்ற தானியங்களைச் சாப்பிட்டால், அவற்றில் உள்ள சத்துக்கள் முறிக்கப்படுவது உடலில் மெதுவாக நிகழ்கிறது. இது சர்க்கரையை சரியாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. அத்தகைய சூழ்நிலையில், உடலில் சர்க்கரை திடீரென அதிகரிக்காது. மாறாக, கோதுமையால் செய்யப்பட்ட மாவு அல்லது மைதா சாப்பிடும் போது அவற்றில் உள்ள சத்துக்கள் உடனடியாக உடைந்து சர்க்கரையாக மாறும், எனவே அவற்றை நாம் சாப்பிடக்கூடாது.

 

அதிகப்படியான சர்க்கரையை உட்கொள்வதால் உடனடியாக உடலில் இன்சுலின் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இது பசியை அதிகரிக்கிறது என்பதுடன் அது ஒரு சுழற்சியாக மாறும். இதற்குப் பிறகு பல வகையான பிரச்சனைகள் எழுகின்றன.

 

டாக்டர் ராஜீவ் கோவில் மேலும் விளக்கிய போது, “மற்ற கார்போஹைட்ரேட்டுகளை விட சர்க்கரையை நேரடியாகச் சாப்பிடுவதால் உடலுக்கு அதிக கலோரிகள் உடனடியாக கிடைக்கும். இது நமக்கு ஆற்றலைத் தருவதோடு மகிழ்ச்சியையும் தருகிறது,” என்றார்.

 

சர்க்கரை மகிழ்ச்சியைத் தரும்

மகிழ்ச்சியான சந்தர்ப்பங்களில் 'இனிமையான ஒன்று' என்று நினைப்பது இயல்பு. பூஜை அல்லது திருவிழா போன்றவற்றின் போது பெறப்படும் பிரசாதம் பெரும்பாலும் இனிப்பாக இருக்கும்.

 

சர்க்கரை நமது மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதை குளுக்கோஸ் வடிவில் எடுத்துக் கொண்டால், நமக்கு உடனடி ஆற்றல் கிடைப்பதோடு, மகிழ்ச்சியாகவும் உணர்கிறோம்.

 

இது குறித்து டாக்டர் ராஜீவ் கோவில் கூறுகையில், ''நமது மூளையின் 80% வேலை குளுக்கோஸைச் சார்ந்தது. உடலுக்கு குறைந்த அளவில் குளுக்கோஸ் கிடைக்கும் போது, தலைசுற்றல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்," என்றார்.

 

அதே சமயம், “சர்க்கரை சாப்பிடுவதும் ஒருவித மகிழ்ச்சியைத் தருகிறது,” என்கிறார் டாக்டர் சுரேந்திர குமார். "நாம் அதைச் சாப்பிட்டு, அது நம் மூளையில் உறிஞ்சப்படும்போது, ​​​​எண்டோர்பின் ஹார்மோன்கள் வெளியிடப்படுகின்றன. இவை நம்மை மகிழ்ச்சியாக உணரச் செய்கின்றன. ஆனால் நாம் இனிப்புகளை சீரற்ற முறையில் சாப்பிடத் தொடங்குகிறோம் என்று இது பொருட்படுத்தப்படுவதில்லை," என்றார்.

 

நாம் போதுமான உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி செய்யாதபோது சர்க்கரை அதிகமாக சாப்பிடுவதால் பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்றும் பின்னர் அது சிக்கல்களை உருவாக்கத் தொடங்குகிறது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

ஒருவர் எவ்வளவு இனிப்பு சாப்பிட வேண்டும்?

உலக உடல் பருமன் குறியீட்டின்படி, 2035-ஆம் ஆண்டில், உலகில் 51% அல்லது 400 கோடி பேர் அதிக உடல் எடையைக் கொண்டவர்களாக (அல்லது பருமனாக) இருப்பார்கள்.

 

அதே நேரத்தில், குழந்தைகளின் உடல் பருமன் விகிதம் இரண்டு மடங்கு அதிகமாக அதிகரிக்கும். உலகளாவிய ஒரு அறிக்கையின்படி, பெண் குழந்தைகளின் உடல் பருமன் விகிதம் ஆண்களை விட இரு மடங்கு அதிகமாக இருக்கும்.

 

இந்தியாவில், 2035-க்குள் 11% பெரியவர்கள் பருமனாக இருப்பார்கள், இதனால் பொருளாதாரத்திற்கு சுமார் 13,000 கோடி ரூபாய் செலவாகும்.

 

அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையின் படி, ஒரு ஆண் ஒரு நாளைக்கு 36 கிராம் அல்லது 150 கலோரிகளுக்கு மேல் சர்க்கரையை உட்கொள்ளக்கூடாது.

 

அதே நேரத்தில், பெண்கள் 25 கிராம் அல்லது 100 கலோரிகளுக்கு மேல் சர்க்கரை எடுத்துக்கொள்ளக்கூடாது.

 

பொதுவாக வளர்ந்த நாடுகளில் சர்க்கரை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்தியாவிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் டாக்டர் ராஜீவ் கோவில்.

 

1980-களின் நடுப்பகுதியில் அல்லது 1990-களில், எடை அதிகரிப்பு அல்லது நீரிழிவு பிரச்சினை பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடம் காணப்பட்டது என்று அவர் கூறுகிறார். ஏனென்றால், அவர்களுக்கு உணவு ஒரு ஆடம்பரமாக அல்லது இன்பமாக இருந்தது. ஆனால் இப்போது கடந்த 15 ஆண்டுகளாக, குழந்தைகளும் இதே போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர், ஏனெனில் அவர்கள் பல உணவுப் பொருட்களை அதிக அளவில் உண்கிறார்கள்.

 

'சிக்கனமான மரபணு வகை' கருதுகோள்

தேசிய மருத்துவ நூலகத்தில் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, பல தசாப்தங்களுக்கு முன்னர் கொழுப்பைச் சேமிக்கக்கூடிய மரபணுக்கள் பொதுமக்களிடம் உருவாயின.

 

மனிதர்களுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் இருந்த நேரத்தில் இந்த மரபணுக்கள் மனித உடலில் வளர்ந்ததாக இரு மருத்துவர்களும் கூறுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், சிக்கனமான மரபணுக்கள் கொண்டவர்கள் கொழுப்பு வடிவில் உணவை சேமித்து வைத்தனர். வறட்சி மற்றும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டால், உடல் இந்த கொழுப்பை ஆற்றல் தேவைக்கு பயன்படுத்தலாம்.

 

வருடத்தில் ஆறு மாதங்கள் சாப்பிட்டுவிட்டு, மீதமுள்ள ஆறு மாதங்கள் எதுவும் சாப்பிடாமல் உயிர் வாழும் வட அமெரிக்க எலி இதற்கு சிறந்த உதாரணம் என்று டாக்டர் சுரேந்திர குமார் விளக்குகிறார்.

 

ஆனால், நமக்கு நன்மை செய்து வந்த இந்த மரபணுவின் செயல்பாடு, தற்போது பாதிப்பை ஏற்படுத்துவதாக இரு மருத்துவர்களும் கூறுகின்றனர். இப்போது மக்களுக்கு உணவு கிடைப்பது மட்டுமல்லாமல், சாப்பிடுவதற்கும் பல விருப்பங்களும், தேர்வுகளும் உள்ளன. இன்னும் இந்த மரபணு முன்பு போலவே கொழுப்பைச் சேமித்து வைக்கிறது. அதேசமயம் மக்கள் உண்ணும் உணவின் அளவோடு ஒப்பிடுகையில் அவர்கள் மிகக் குறைவான அளவுக்கு மட்டுமே உடல் செயல்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். குறைந்த அளவு உடற்பயிற்சியில் மட்டுமே அவர்கள் ஈடுபடுகிறார்கள்.

 

அதிக சர்க்கரை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

அதிகப்படியான இனிப்புகளை சாப்பிடுவதால் உடலுக்கு பல பாதிப்புகள் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

அதில் உடல் பருமன் பிரச்னை முதலாவதாக இடம்பெற்றுள்ளது. அதன் பிறகு உயர் இரத்த அழுத்தம், கொழுப்பு, நீரிழிவு மற்றும் பிற இதய நோய்கள் போன்ற பிற சிக்கல்களும் எழுகின்றன.

 

உதாரணமாக, பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சனையும் இருக்கலாம். அதே நேரத்தில் தோலில் கருமை அல்லது வேறு ஏதாவது நிறமி உருவாகலாம்.

 

சர்க்கரைக்கும் புற்றுநோய்க்கும் உள்ள தொடர்பு

மருத்துவர்களின் கூற்றுப்படி, உடலில் அதிக அளவு இன்சுலின் இருப்பது புற்றுநோய்க்கான காரணங்களில் ஒன்றாக உள்ளது. ஆனால் புற்று நோயாளி இனிப்பு சாப்பிடக் கூடாதா?

 

புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள் சர்க்கரையைக் கைவிட வேண்டும் என்று எந்த வழிகாட்டுதலும் இல்லை என்று டாக்டர் ராஜீவ் கோவில் கூறுகிறார். ஆனால் உடலில் சர்க்கரை அதிகமாக இருந்தால் புற்றுநோய்க்கு சாதகமான சூழல் உருவாகும் என்பது உண்மைதான் என்கிறார்.

 

அவரைப் பொறுத்தவரை, புற்றுநோய் என்பது உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயுடன் தொடர்புடையது. ஏனெனில் இதுபோன்ற நோயாளிகளுக்கு புற்றுநோய் பாதிப்பு 20% அதிகம்.

 

புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் இருந்தாலோ, குளுக்கோஸைத் தாங்க முடியாமல் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்க ஆரம்பித்தாலோ, இனிப்பு சாப்பிடக் கூடாது என்கிறார் டாக்டர் சுரேந்திர குமார். ஆனால் அத்தகைய பிரச்சனை இல்லை என்றால் நோயாளி குறைந்த அளவில் இனிப்புகளை எடுத்துக் கொள்ளலாம்.

 

உதாரணமாக, "யாராவது ஐஸ்கிரீம் சாப்பிட விரும்பினால், அவர் முழு ஸ்கூப்பையும் ஒரே நேரத்தில் எடுக்கக்கூடாது. அவர் ஒரு நாளைக்கு வெவ்வேறு நேரங்களில் ஸ்கூப்பில் இருந்து ஒரு ஸ்பூன் ஐஸ்கிரீமை எடுத்து அதை சாப்பிட வேண்டும். ஒரு நீரிழிவு நோயாளியும் இப்படித் தான் ஐஸ் கிரீமைச் சாப்பிடவேண்டும்," அவர் விளக்கினார்.

 

இதற்கான காரணத்தை விளக்கும் டாக்டர் சுரேந்திர குமார், “புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் தினமும் வெவ்வேறு நேரங்களில் சிறிதளவு ஐஸ்கிரீம் சாப்பிட்டால், அவர்களது உடலில் இருக்கும் இன்சுலின் அதைத் தாங்கும். ஆனால், அதிக அளவு சர்க்கரை உடனடியாக உள்ளே நுழைந்தால் அதை இன்சுலின் கையாளமுடியாது," என்றார்.

 

செயற்கை அல்லது இயற்கை சர்க்கரை: எது சிறந்தது?

வெல்லம், ரொட்டி போன்ற பல பொருட்களில் சர்க்கரை பயன்படுத்தப்படுகிறது.

 

ஜாமில் பிரக்டோஸ் மட்டுமே உள்ளது. இயற்கையான இனிப்பு என்றால் அது தீங்கு விளைவிக்காது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் சர்க்கரையை தனித்தனியாக சேர்த்தால், அதை நீண்ட நேரம் உட்கொள்வது தீங்கு விளைவிக்கும்.

 

இதுபோன்ற உணவுகளை சாப்பிடுவதால் திருப்தி ஏற்படாது என்றும், மீண்டும் மீண்டும் சாப்பிட ஆசைப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். பின்னர் இது ஒரு சுழற்சியாக மாறும். அது உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்குகிறது.

 

இயற்கை சர்க்கரை இல்லாத இனிப்புக்களை, அதாவது செயற்கை சர்க்கரை சேர்க்கப்படும் பொருட்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், சர்க்கரை இல்லாத உணவுகப் பொருட்களை ஏற்றுக்கொள்ளலாம்.

 

சைவம் மற்றும் அசைவ உணவுப் பொருட்களில் பச்சை மற்றும் சிவப்பு வட்டக் குறியீடுகள் உள்ளதைப் போலவே, நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பான உணவுப் பொருட்களையும் வழங்க வேண்டும் என்று மகாராஷ்டிர சுகாதார அமைச்சகத்திடம் பரிந்துரைத்ததாக டாக்டர் ராஜீவ் கோவில் கூறுகிறார்.

 

இந்திய மக்களிடையே உணவு லேபிள்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாதது மட்டுமின்றி, உடல்நலம் சார்ந்த அறிவும் அதாவது உடல்நலம் தொடர்பான அடிப்படை விஷயங்களைப் பற்றிய தகவல்களும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உணவுப் பொருட்களின் காலாவதி தேதியைப் பார்க்கிறார்கள். ஆனால் அந்த உணவுப் பொருளில் என்ன இருக்கிறது என்பதைப் படிப்பதில்லை. அதேசமயம் அதைத் தெரிந்துகொள்வது தான் மிகவும் முக்கியமானது.

 

 

நன்றி:--சுசீலா சிங் மற்றும் பாயல் புயன்

பதவி,பிபிசி நியூஸ்

0 comments:

Post a Comment