புத்தனின் விஜயம் -கவி

 


புத்தனின் விஜயம் 

அருளொளி ஆனந்த குரு

அகம் நிறை கருணை தீபம்,

அஹிம்சையின் அமுத வார்த்தை

அனைத்துலகும் விதைத்த நாதன்.

 

தனிமையில் தாழ்ந்து வந்து

தீவு மண்ணை நோக்கி நின்றார்;

தம்மம் மலர்ந்திடும் என

தரும நிலம் கருதிச் சென்றார்.

 

ஆனால் அங்கே கண்ட காட்சி

அன்பின் பெயரில் பகை நிழல்,

சமயத்தின் சுவர் உயர்ந்து

சாந்தியின் சொல் சிதைந்த நிலம்.

 

கருணையே என் மார்க்கம்என்ற

கல்வி களங்கம் அடைந்ததைக் கண்டு,

மௌனத்தின் மொழி பேசும் கண்கள்

மனித துயர் அளவை எண்ணின.

 

அவ்வேளையில் வியப்பொன்று

அமைதி நிலம் நடுங்கியது;

சிலைபோல் நின்ற உருவம் ஒன்று

சிதறிய மனம் போல எழுந்தது.

 

அடுத்தவர் நிலத்தில் கூட

அறியாது ஊடுருவி நிற்கும்,

திடீரென முளைக்கும் சிலையால் 

பிரிவு எண்ணம் வளர்ந்ததைக் கண்டு.

 

கருணைக் கடல் கண்கள் மூடி

காலம் சாட்சி மண்ணைத் தொட்டு,

மயங்கினார் போதிச் சுடர்

மனித நேயம் காய்ந்ததினால்.

 

விழுந்தது உடல் அல்லோ;

விழுந்தது அவரது கனவு.

எழுந்திடும் மௌன போதம்:

மனிதம் மேலே; சமயம் கீழே;

அன்பே நிலம், அமைதியே சிலை.”

-செ மனுவேந்தன் 


0 comments:

Post a Comment