போர்வெறி விலகு
நாடு நினையாத நாயகர் ஆட்சி நடப்பதால்
நாசம் நெருங்கும் நெடுந்தரணி –
ஓடும் இரத்தம் ஓயா கண்ணீர்
உலகம் துயரும் உருக்கமிது.
கொள்கை எனும் கொடிய முகமிட்டு
கோபம் கொழுந்தென கிளப்புவோர் –
தம் வீட்டு தீயை அணைக்க மறந்து
தன் அடுத்த மண்ணில் நெருப்பிடுவார்.
தந்தையர் இழந்த பிள்ளை அழுகை,
தாய் மார்பைத் தேடும் துடிப்பு;
கணவனை இழந்த கண்கள் உலராது,
கணவன்மார் இழந்த மனைவியர் வாடல்.
மனைவி இழந்த மனம் நொறுங்க,
மகன் இழந்தோர் மூச்சே நின்றது;
அழுகை நதிகள் பெருகும் பூமி
அமைதி தேடும் அகலம் ஆனது.
வல்லரசே! வாழ விடு இந்நேரம்,
வழி தவறாதே மனித நேயம்;
உன் வீடு காப்பது முதற்பணி —
உலகம் காப்பது கருணை வழி.
விலகு போர் வெறி! விலகு வன்மை!
விடிய விடியாத இருள் அகலும்;
மனங்கள் மாறும் நாளிலே தான்
மண்ணின் மரபு மீண்டும் மலரும்.
⋲⋲⋲⋲⋲⋲⋲⋲
'பொன்னாள் இதுபோலே வருமா இனிமேலே'
அன்ன நடையாள் தூளியிலே ஆடி
இன்முகம் காட்டி அருகில் அழைத்து
இன்பம் கொட்டும் நிலா ஒளியில்
மின்னும் விளக்கில் இருவரும் சேர
பொன்னாள் இதுபோலே வருமா இனிமேலே ?
சின்ன இடையாள் அழகு காட்டி
தேன் சிந்தும் இதழ்கள் பதித்து
கன்னம் இரண்டிலும் முத்தம் கொடுத்து
அன்பு மழையால் உள்ளம் நனைக்க
இன்னாள் என்றும் கிடைக்குமா மீண்டும் ?
⋲⋲⋲⋲⋲⋲⋲⋲
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
0 comments:
Post a Comment