ஶ்ரீதேவி பற்றிய 25 நினைவுகள்!


நம்நாடு m.g.r.உடன் 
ஐம்பது ஆண்டுகளாக ஐந்து மொழிகளிலும் தனது மிகச்சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை வசீகரித்த  நடிகை ஶ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்திருக்கிறார்அவரது மரண செய்தியைக் கேட்டு ரசிகர்களும் பொதுமக்களும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இந்த நிலையில், அவர் கடந்து வந்த பாதையும் அவரைப் பற்றிய சில தகவல்களையும் பார்ப்போம்.

நடிகை ஸ்ரீதேவியின் இயற்பெயர்  ஸ்ரீ அமா யங்கேர் அய்யப்பன். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள மீனம்பட்டி கிராமத்தில் ஆகஸ்ட் 13, 1963-ல் பிறந்தார். ஸ்ரீதேவியின் தந்தை அய்யப்பன் தமிழகத்தைச் சேர்ந்தவர். தாய் ராஜேஸ்வரி ஆந்திராவைச் சார்ந்தவர்.

கந்தன் கருணை 
ஸ்ரீதேவி  தனது திரையுலக வாழ்வை குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பித்துவிட்டார். எம்..திருமுகம் இயக்கிய பக்திப்படமான 'துணைவன்' திரைப்படத்தில் தனது நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக, சிறு வயது முருகன் கதாபாத்திரத்தில்  அறிமுகமானார் ஸ்ரீதேவி. 'ஜூலி' திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக இந்தியிலும் கால் பதித்தார் ஸ்ரீதேவி.

'நம் நாடு', மற்றும் 'என் அண்ணன்' திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுடன் இணைந்து நடித்தார். 'வசந்த மாளிகை' மற்றும் 'பாரத விலாஸ்' திரைப்படங்களில் சிவாஜியுடனும் நடித்தார்.

தொடர்ந்து பல்வேறு மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரீதேவியை பதிமூன்று வயதிலேயே 'மூன்று முடிச்சு' படத்தின் மூலம் கதாநாயகியாக்கினார், ,மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர்.

ஶ்ரீதேவி


பாபு -சிவாஜிகணேசனுடன் 
தொடர்ந்து '16 வயதினிலே', 'சிகப்பு ரோஜாக்கள்' ,'ஜானி', 'வறுமையின் நிறம் சிவப்பு', 'மீண்டும் கோகிலா', 'மூன்றாம் பிறை' எனப் பல திரைப்படங்களின் மூலம் அன்றைய தமிழ் ரசிகர்களின் ஆதர்ச இடத்தைப் பிடித்து பிரபலமானார், ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவி, 1978-ல்  'சால்வா சாவான்' படத்தின் மூலம் கதாநாயகியாக இந்தியில் அறிமுகமானார். அதன்பிறகு 1983-ல் வெளியான 'ஹிம்மத்வாலா' திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். இந்தத் திரைப்படத்தில் இருந்துதான் ரசிகர்களால் ஸ்ரீதேவி, 'தண்டர் தைஸ்' என்னும் செல்லப்பெயரால் அழைக்கப்பட்டார்

பாலுமகேந்திராவின் இயக்கத்தில் 1983-ஆம் ஆண்டு வெளியான 'மூன்றாம் பிறை' திரைப்படம் நடிப்பாற்றலில் ஸ்ரீதேவியின் மற்றொரு பரிமாணத்தையும் வெளிப்படச் செய்தது. மனநிலை பாதித்த பெண்ணாக ஸ்ரீதேவி நடித்த அந்த வேடமும், சுப்பிரமணி என்ற நாய்க்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் காட்சிகளும் பிஞ்சு மொழியைத் திரையில் பிரதிபலித்தன. இந்தத் திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி, அடுத்த தலைமுறை ரசிகர்களையும் அழ வைக்கும்.

13 வயது -கதாநாயகி 
1986-ஆம் ஆண்டில், ஸ்ரீதேவி  'இச்சாதாரி பாம்பு' வேடத்தில் நடித்து வெளியாகிய 'நாகினா' திரைப்படம் அந்த வருடத்தின் இரண்டாவது பிளாக் பஸ்டர் படம். க்ளைமாக்ஸில் 'மெயின் தேரி துஷ்மான்பாடலுக்கு இவர் ஆடும் நடனம் இந்தி சினிமாவின் மிகச்சிறந்த நடனங்களுள் ஒன்றாகும்.

1987-ல் ஸ்ரீதேவி பத்திரிக்கையாளராக நடித்து வெளியான 'மிஸ்டர் இந்தியா' திரைப்படம் அந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்று. மேலும், இந்தி சினிமாவில் வெளியாகிய தேசப்பற்று திரைப்படங்களில் தவிர்க்கமுடியாத திரைப்படமாக இது விளங்கி வருகிறது.

இந்திய சினிமாவில் அதிக பொருட்செலவில் உருவான திரைப்படங்களில் ஒன்றான 'ரூப் கி ராணி ஷோரோன் கா ராஜா' திரைப்படம் வசூலில் தோல்வியைத் தழுவியது. ஆயினும்கூட ஸ்ரீதேவி நடித்த கதாபாத்திரத்தை, 'இதுவரை தென்னிந்திய நடிகைகள் நடித்த பாத்திரத்திலே சிறந்த பாத்திரம் இதுதான்' எனப் புகழ்ந்து கூறின அன்றைய பத்திரிகைகள்.

1996-ல் போனிகபூரைத் திருமணம் செய்துகொண்டார் ஸ்ரீதேவி. இவருக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதன்பிறகு இல்லறத்தில் ஈடுபட்ட ஸ்ரீதேவி, கலையுலக வாழ்வைவிட்டு தற்காலிகமாக விலகினார்.

ஶ்ரீதேவி

நான் அடிமையில்லை-ரஜனி 
2004-ஆம் ஆண்டில் இருந்து 'மாலினி ஐயர்' சீரியலின் மூலம் சின்னத்திரையில் கால் பதித்தார் ஸ்ரீதேவி. 'கபூம்எனும் ரியாலிட்டி ஷோவில் நடுவராகவும் இருந்திருக்கார் ஸ்ரீதேவி.

1997-ல் இருந்து பதினைந்து வருடங்கள் பெரியதிரையில் நடிக்காமல் இருந்த ஸ்ரீதேவி, 2012-ஆம் ஆண்டு 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். ரஜினி நடித்த 'முத்து' திரைப்படத்திற்குப் பிறகு மிகப்பெரிய வசூலை ஜப்பானில் குவித்தது இந்தத் திரைப்படம்.

நடிகர் விஜய் ஸ்ரீதேவியின் தீவிர ரசிகர். 'புலி' திரைப்படத்தின் மூலம் விஜய்க்கு அத்தையாக நடித்தார் ஸ்ரீதேவி. 1986-ஆம் ஆண்டு வெளியான 'நான் அடிமை இல்லை' திரைப்படத்திற்குப் பிறகு, 'புலி' திரைப்படத்தில் தமிழில் டப்பிங் பேசினார் ஸ்ரீதேவி. 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' மூலம் அஜித்துடனும் இணைந்து நடித்துள்ளார் ஸ்ரீதேவி.

இந்தித் திரையில் -
தனது சொந்த நிறுவனத்தின் தயாரிப்பில் ஸ்ரீதேவி நடித்த 'மாம்' திரைப்படம் அவரது நடிப்பில் வெளிவந்த 300-வது திரைப்படமாகும். அவர் அறிமுகமான 'துணைவன்' திரைப்படம் வெளியான ஜூலை முதல் வாரத்தில் வெளியானது. முதல் படம் வெளியாகி, ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆன ஶ்ரீதேவியின் 'மாம்' திரைப்படமும் ஜூலை முதல் வாரத்தில் வெளியானது.

ஸ்ரீதேவி ஓவியம் வரைவதற்கு ஆர்வம் காட்டுவார். 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அவரது ஓவியங்கள் ஏலம் விடப்பட்டு அதில் கிடைத்த பணத்தை நிதியுதவியாக செய்தார் ஸ்ரீதேவி. மேலும், ஆசியன் அகாடமி ஆப் பிலிம் & டெலிவிஷன் போர்டில் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார், ஸ்ரீதேவி.

2012-ஆம் ஆண்டு ஆமிர்கான் நடத்திய 'சத்யமேவ ஜெயதே' டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்ரீதேவி, பாலியல் ரீதியாக தவறாக நடத்தப்பட்ட ஒரு குழந்தையின் பேட்டியைக் கண்டார். பின்பு, 'குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக ஒரு சட்டத்தை நிறைவேற்றவேண்டும்' என்று ஆமிர்கான் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் ஸ்ரீதேவியும் கையெழுத்திட்டார்.

2013-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை வென்றார் ஸ்ரீதேவி [sridevi ]. மேலும், பத்துமுறை பிலிம்ஃபேர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, ஐந்து முறை வென்றுள்ளார். 'மூன்றாம் பிறை' திரைப்படத்தின் மூலம் தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதினை வென்றார்.

இந்தி  சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார், ஸ்ரீதேவிதான். மேலும், அவரது தலைமுறையின் பெரும்பாலான பெண்கள் ஸ்ரீதேவியைப் பார்த்துதான் நடிகைகளாக மாறினர். ஸ்ரீதேவியை ரோல் மாடலாகக் கொண்டுதான் நடிக்க வந்ததாக நிறைய நடிகைகள் பேட்டி கொடுத்திருக்கின்றனர்.

இங்கிலிஷ்,விங்கிலீஷ் 
மனோரமாவிற்குப் பிறகு எம்.ஜி.ஆர், சிவாஜி , ரஜினி, கமல் ஆகியோரைத் தொடர்ந்து மூன்றாவது தலைமுறையான விஜய், அஜீத்துடனும் இணைந்து நடித்தவர் ஸ்ரீதேவி மட்டும்தான். போனிகபூர்  ஸ்ரீதேவியைத்  'மை ஹீரோ' எனக் குறிப்பிடுவார். மேலும், அந்தக் காலத்திலேயே 'பதினாறு வயதினிலே', 'சால்பாஸ்', 'சாந்தினி', 'நாகினா', 'காயத்ரி' போன்ற பெண்களை மையமாகக் கொண்ட வலுவான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருக்கிறார் ஸ்ரீதேவி.

ஶ்ரீதேவி

ஸ்ரீதேவிக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகர் செந்தில். ஜெயலலிதா மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவி நடித்ததிலேயே அவருக்கு மிகவும் பிடித்த தமிழ் கதாபாத்திரங்கள் 'மூன்று முடிச்சு' செல்வியும், 'மூன்றாம் பிறை' விஜி கேரக்டர்.

சென்னையை மிஸ் பண்ணுவதாக அவர் ஒருநாளும் எண்ணியதில்லை. சென்னையில் ஸ்ரீதேவிக்கு சொந்த வீடு, தோட்டங்கள் இருக்கின்றன. அவருடைய உறவினர்கள் நிறையபேர் சென்னையில் வசிக்கின்றனர். அதனால், அடிக்கடி சென்னை வருவதால் ஒருநாளும் அவர் சென்னையை மிஸ் பண்ணவில்லை.

ஸ்ரீதேவி ஃபேஷன் மாடலாக 2008-ல் அறிமுகமானார். பல பேஷன் பத்திரிக்கைகளில் ஸ்ரீதேவியின் புகைப்படம் அட்டைப்படமாக வெளிவந்திருக்கிறது. கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த சிரோக் ஃபிலிம்ஃபேர் கிளாமர் & ஸ்டைல் ​​விருதுகளில் 'அல்டிமேட் டிவா' விருதைப் பெற்றார் ஸ்ரீதேவி. மேலும், அவர் ஒரு ஃபேஷன் ஐகானாகவும் திகழ்ந்தார்.

ஸ்ரீதேவி அம்மா செல்லம். அம்மா மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். ஷூட்டிங்கின்போது ஸ்ரீதேவியை மிகவும் கவனமாகப் பார்த்துகொள்வாராம் அவரது அம்மா. ஸ்ரீதேவி தனது தந்தையை 'லம்ஹே' திரைப்படப் படப்பிடிப்பின்போதும், தாயை 'ஜூடாய்' படப்பிடிப்பின்போதும் இழந்தார்.

கடந்த ஆண்டு கமலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன ஸ்ரீதேவி கமலின் அரசியல் குறித்து சூசகமாக, "உங்களது புதிய முயற்சிகள் என்னவாக இருப்பினும் அதற்கு எனது வாழ்த்தினைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் கூறினார்.

தலைமுறை கடந்தும் ஐம்பது ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் இளமையாக ஜொலிக்கும் ஸ்ரீதேவியின் இறுதி மூச்சு நின்றிருக்கிறது. இருந்தாலும் காலங்கள் கடந்தும் அவரது படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் ஸ்ரீதேவி.

0 comments:

Post a Comment