எல்லோரும் எல்லாமும்.....


இன்றைய காலகட்டம் தொழில் நுட்பமயமான ஒருயுகம்.தற்காலத்து கணினி கற்கும் பிள்ளைகளை இரவும் பகலும் பலமணிக் கணக்கில் தன்னோடு பிணைத்துக்கொள்ளுமளவுக்கு தொழில் நுட்பம் பல விந்தையான அசுர மாற்றங்களைக் கொண்டிருக்கிறது, கொண்டிருக்கப்போகிறது.
ஆனால் தற்காலத்துப் பெற்றோர்கள் அதாவது கிட்டத்தட்ட 40 வயதிற்கு மேற்பட்டோர்  தங்கள் பொழுதுபோக்கு சாதனங்கள் ரேடியோ,தொலைக்காட்சி, பத்திரிகைகள்,சஞ்சிகைகள் என்றே கூறுவார்கள் .அவைதான் தற்காலத்தில் வீட்டில் வாழும் வயது முதியோர்களின் உற்ற நண்பர்களாகவும் பொழுது போக்கு சாதனங்களாகவும் விளங்குவது  அனைவரும் அறிந்ததே.

 ஆனால் இக்கட்டுரை அந்த 40 வயதிற்கு மேற்பட்டோரை குறிவைத்தே வரையப்படுகிறது.ஏனெனில் அவர்களில் சிலருடன்  தற்காலத்து கணினி தொழில் நுட்பம் தொடர்பாக அணுகியபோது அவை பிள்ளைகளின் சமாச்சாரம் என்று அவர்கள் அவற்றிலிருந்து விலகி வாழ்வது  எமக்கு அதிர்ச்சியினை அளித்தது.

 சிறுபிள்ளைகளுக்கு ஒரு சாதாரண விடயமாகக் கையாளப்படும் கணினி த்தொழில்நுட்பம், பெரியோர்களுக்கு ஒரு சவாலாக அமைந்ததற்கு காரணம் அவர்கள் அதனை பிள்ளைகளோடு சம்பந்தப்பட்ட விடயம் என்ற தப்பான கருத்தினைக் கொண்டு அவற்றிலிருந்து விலகி இருந்தமையே காரணம் ஆகும்.

 நடக்கப்போவதினை ஆராய்வதற்குமுன்,நடந்தவைகளை ஒருமுறை அலசுவது இக்கட்டுரையின் நோக்கத்திற்கு அத்திவாரமாக அமையும் என உணர்கிறோம்.
வானிலை உடாக ஒலிபரப்பும் நிகழ்ச்சிகளை தனியே வானொலிப்பெட்டிகளுடாக நீண்ட காலமாக கேட்டுக்கொண்டிருந்த  நாம் 1970 களின் ன் பின்னரே நாம் புதிய தொழில் நுட்பங்களை சுவைக்க ஆரம்பித்தோம்.

 ஓடியோ ரேப் இல் பாடல்கள் கேட்டோம்,இன்று அவை இல்லை. அச்சாதனங்களும் இன்றில்லை.

வீடியோ ரேப் இல் படங்கள்  பார்த்தோம்,இன்று அவை இல்லை. அச்சாதனங்களும் இன்றில்லை.

சிடி யில் பாடல்கள் பெரிய செட் இல் கேட்டோம்,இன்று அவை இல்லை.இந்த சிடி யும் மெல்ல,மெல்ல யுஎஸ்பி வருகையால் மறைந்துகொண்டு இருக்கிறது.

விசிடி யில் சினிமாப் படங்கள் நாம் பார்த்துக்கொண்டு இருந்தாலும் அதனையும் யுஎஸ்பி விழுங்கிக்கொண்டு இருக்கிறது.

தொலைக்காட்சிக்கான கேபிள் பாவனையும் தொலைந்துகொண்டு வயர்லெஸ் இன்டர்நெற் ஆட்சி மாறிக்கொண்டு இருக்கிறது.

உறவுகளின் சுகம் நலன்கள்,மற்றும் அவசர செய்திகளை முன்னர் தபால் சேவைமுலம் பெற்றோம்.இன்று  எந்த நாட்டிலிருந்தும் e-mail இல் ஒரு செக்கனில் அதை பெற்றுவிட முடிகிறது.

மற்றும் தொலைபேசி பாவனையும் வைபர், வாட்ஸப், மெசேஞ்சர் வழிகளாக இலவசமாகவே அதுவும் முகம் பார்த்து நேரில் கதைக்க வழிசமைத்துக் கொடுத்துள்ளது.

 முன்பெல்லாம் ஒருவரை சந்திக்கும்போது தொலைபேசி இலக்கத்தையே கேட்டுக்கொள்ளும் இளையோர்,மற்றும் அலுவலகங்கள் தற்போது உங்கள் இமெயில் விலாசத்தையே கேட்கின்றனர்.கடிதம்,தொலைபேசி மூலம் சாதிக்கமுடியாத பல சாதனைகளை புதிய தொழில்நுட்பம் புரிந்துகொண்ட இருக்கிறது.புலம் பெயர்ந்து தொலைந்த உறவுகளை சந்தித்தல்புதுப்பித்தல்,முகம் பார்த்து கதைத்தல்,திருமணம் மட்டுமன்றி வீட்டு அன்றாட நிகழ்வுகளை உறவுகள் நேரடியாக கண்டுகளிக்க  Facebook, Skype  வழியில் கணணி கை கொடுக்கிறது.அதாவது  வீட்டு த் தொலைபேசிகளும் எம்மை விட்டு விலகும் நாட்கள் அண்மித்துக்கொண்டு இருக்கிறது. கைத்தொலைபேசிகளும்  முழுக்க  முழுக்க கணினி மயப்படுத்தப்பட்டுவிட்டன .Dora என்ற Sweden நாட்டிலுள்ள  தொழிற்சாலை பெரிய பொத்தான்கள்,பெரிய எழுத்துக்கள் அடங்கிய கைத்தொலைபேசிகளை வயோதிபர்களுக்காகத் தயாரிக்கத்  தொடங்கியுள்ளது.

 பல நுற்றுக் கணக்கான வானொலிச் சேவைகள் தமிழிலும்,இன்ரநெட்டில் இயங்க ஆரம்பித்துவிட்டன.வெகுவிரைவில் வானொலிப் பெட்டிகளும் பாவனையிலிருந்து தூக்கி எறியப்படப்போகிறது.தமிழ் தொலைக்காட்சி உட்பட பல்லாயிரக் கணக்கான தொலைகாட்சி  சேவைகள் மிகக் குறைந்த கட்டணத்திலும்,ஒருசில இலவசமாக இந்திய  தமிழ் தொலைகாட்சி சேவைகளும்  (யாழ்ப்பாணத்திலிருந்து யாழ்ஒளி தொலைக்காட்சி சேவை உட்பட) இன்டநெட் இல்  இயங்க இயங்க ஆரம்பித்துவிட்டன.எனவே சில வருடங்களில் தொலைக்காட்சிப் பெட்டிகளும் தொலைந்துவிடும்.

இன்று உலகளாவிய ரீதியில் வெளியாகும் பத்திரிகைகள்,சஞ்சிகைகள்,படங்கள்,தொலைக்காட்சி  நாடகங்கள்,மத சம்பந்தமான பழைய,புதிய புத்தகங்கள்,வரலாறு,பாடல்கள்,தேவாரங்கள் என உலகிலுள்ள அனைத்து அச்சுப்பிரதிகளும்,பொழுதுபோக்கு அம்சங்களும் கட்டுரை வடிவிலும்,வீடியோ வடிவிலும் தமிழில் கணினியில் கிடைக்கின்றன. இன்று இவற்றை எல்லாம் தேடிக் கடைகடையாக அலையத்தேவை இல்லை.கணினி முன் குந்தினாலே போதும்

ஆமாம் பத்திரிகைகள்,சஞ்சிகைகள் என்பனவற்றுக்கும் இனி வேலை இல்லாமல் போய்விடும்.

அச்சுலகில் இன்று ஆங்கிலம் போன்று தமிழும் எழுத்துக்களை தேடித் தட்டும் காலத்தினைக் கடந்துகொண்டிருக்கிறோம். ஆமாம்.உங்கள் வாய்மூலம் தமிழில் கூறுவதனை கணனி சொற்களாக,வசனங்களாக, கட்டுரைகளாக திரையில் பதிவு செய்து அதனை விரும்பின் அச்சுப்பிரதிகளாகவும் எடுத்துக் படிக்கமுடியும்.

 வயது ஏற ஏற எமது உடம்பை மாத்திரமல்ல மூளையையும் அப்பியாசம் செய்ய வேண்டும்.ஞாபகசக்தி குன்றாமல் இருப்பதற்கு பல பயிற்சிகளை செய்யும்படி பணிக்கிறார்கள்.அவ்வாறு மூளை அப்பியாசத்திற்கு கணினியை உசாவுத்தல்  ஒரு நல்ல விடயமாகும்.வளர்ந்துவிட்ட நாடுகளில் முதியோருக்கென இலவச கணினி வகுப்புக்கள் நடைபெறுகின்றனஇலங்கையிலும் கிராமிய மற்றும் நகர்ப்புறங்களில் அரச உதவியுடன் அறிவகம் எனும் பெயரில் கணினி  நிலையங்கள் உருவாக்கப்பட்டு குறைந்த செலவில் மாணவர்களிருந்து முதியோர்வரை தொழில்நுட்ப அறிவு வழங்கப்படுகின்றது. இச்சலுகை எல்லோருக்கும்   கணினி அறிவு தேவை என்பது காலத்தின் கட்டாயம்  எனப் பறை சாற்றுகிறது.     

அதாவது,தற்போதுள்ள உங்கள் அனைத்து பொழுது போக்கு சாதனங்களும்   எதிர்காலத்தில் முற்றாக அற்றுப் போய்விடும்.கணினி பற்றி எதுவும் அறியாதவர்களுக்கு அதன்  மூலம் எந்தபொழுது போக்கு சாதனங்களும் அனுபவித்துக்கொள்ள வாய்ப்பே இல்லாமல் ஆகிவிடும்.அவசரத்திற்கு  மகனை அழைப்பது என்றாலும் கணினி அறிவே தேவைப்படும்.எனவே அவ்வறிவினை இன்றே உங்கள் பிள்ளைகளுடன் இணைந்து மெல்ல மெல்ல கற்றுக் கொள்ளுங்கள்.கணணி அறிவு உள்ளவர்கள் உங்கள் நண்பர்களையும் உறவுகளையும் அந்த உலகில் பிரவேசிக்க உற்சாகப்படுத்துங்கள்கற்றுக்கொடுங்கள்.

கற்றுக்கொடுப்பதால் உங்கள் அறிவும் அதிகரிக்கும்.
கணணி அறிவு இல்லாவிடில் உங்கள் முதுமைக்காலத்தில் நீங்கள் ஒரு சிறைக்கைதிபோல் சுவரைமட்டும் பார்த்துக் கொண்டிருக்கவேண்டி வரும்.எனவே காலத்தோடு இணைந்து செல்ல எல்லோரும் கற்றுக்கொள்வோம்.ஞாலத்தினை வெல்வோம்.
இதுவரையில் கணனிப்பக்கம் குந்தினதில்லையா? தொட்டுப்பாருங்கள் எல்லாம் புரியும் 
எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் -இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.

ஆக்கம்-செ.மனுவேந்தன்.

0 comments:

Post a Comment