எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:18

தமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும். இத்தமிழ் மொழிக்கு வரிவடிவம் அதாவது எழுத்து உருவம் என்று உருவானது? என்ற வினாவிற்குச் சரியான விடை இன்று வரை கிடைக்கவில்லை. தற்சமயம் நமக்குக் கிட்டியுள்ள ஆதாரங்களைக் கொண்டு சில மொழிவழி உண்மையை உணர்கிறோம். இதன் படி சிந்து வெளி எழுத்தில் இருந்து அநேகமாக தமிழி அல்லது தமிழ்-பிராமி ஏற்பட்டு இருக்கலாம் என்றும், பின் பிராமி எழுத்துக்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவதற்கிணங்க அதை மாற்றியதால், கி.பி. 3 – ஆம் நூற்றாண்டிலிருந்து வட்டெழு த்தானது தமிழ்ப் பிராமியிலிருந்து பிரியத் தொடங்கி, அது நாளடைவில் சிறுகச் சிறுக வளர்ந்து கி.பி. 6 -ஆம் நூற்றாண்டில் தனித்தன்மை பெற்று, வட்டெழுத்து தோன்றியது எனப் பொதுவாக கருதப்படுகின்றது. இங்கு, வளைந்த கோடுகள் அதிகமாகப் பயன்படுத்தப் பட்டதால் அம்முறைக்கு வட்டெழுத்து எனப் பெயர் பெற்றது. பிராமி எழுத்துக்கள் கோடுகளாக இருப்பதால், கோடுகளை ஓலைச்சுவடியில் எழுதினால் அவை கிழிந்து விடும் என்பதால் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்க கலாம் என நாம் கருதலாம். இது, கி.பி மூன்றாம் நூற்றாண்டிலிருத்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை தமிழை எழுத பயன்படுத்தப்பட்டு வந்த ஓர் எழுத்து முறையாகும். வட்டெழுத்தை மலையாள மொழியினை எழுதவும் பயன்படுத்தினர். கி.பி 8ஆம்
நூற்றாண்டுகளில் வட்டெழுத்து கிரந்த எழுத்துக்களுடன் மணிப்பிரவாளத்தை எழுத பயன்படுத்தப்பட்டது. சமஸ்கிருதமும் திராவிட மொழி யொன்றும் கலந்து எழுதப்பட்ட ஒரு இலக்கிய நடையைக் மணிப்பிரவாளம் என பொதுவாகக் குறிப்பர். மேலும்  வட்டெழுத்து க்களின் ஆரம்ப நிலைகளைத் தெரிந்து கொள்வதற்கு, நடுகற்களே சரியான சாட்சிகள் ஆகும் என அறிஞர்கள் கூறுகிறார்கள். கி.பி 11ஆம் நூற்றாண்டுகளில் வட்டெழுத்து தமிழ் நாட்டில் வழக்கொழிந்து, தற்கால தமிழ் எழுத்துக்களை ஒத்த எழுத்து முறை பயன்படுத்தப்பட  துவங்கப்பட்டது. ஆனால் கேரளத்தில் 15ஆம் நூற்றாண்டுவரை வட்டெழுத்து மலையாளத்தை எழுத பயன்படுத்தப்பட்டது. இவையை தவிர, இன்னும் இரண்டு எழுத்து முறைகள் பண்டைய தமிழ் இலக்கியத்தில் காணப் படுகின்றன.அவை  கண்ணெழுத்து,கோலெழுத்து ஆகும்.

வட்டெழுத்திற்கும் கோலெழுத்திற்கும் இடையே பாரிய வேறுபாடு இல்லை. ஆயினும் பிரதேசத்திற்குப் பிரதேசம் இதில் வேறுபாடுகள் காணப்பட்டன. வட்ட வடிவில் அமைந்த கோடுகளைத் தன்னுள் கொண்டு அமைந்தவை  வட்டெழுத்துகள் என்றும் இதற்க்கு  சற்று மாறுபட்டதாக, எழுத்துகள் நீள் வடிவில் அமைவது கோலெழுத்து ஆகும். கோலால் எழுதப்படும் எழுத்து கோலெழுத்து என பொதுவாக விளக்கப்படுகிறது. கோலெழுத்து என்றால் அரச ஆணைகள் எழுதப்படும் எழுத்து என்றும் ஒரு விளக்கம் உண்டு. கோல் = செங்கோல், எனவே அரசனைக் குறிக்கும் என கருதலாம்? பழங்கால தமிழகத்தில் ஏற்றுமதியாளர்கள் பண்டப் பொதிகளின் மீது சரக்கின் பெயரையும், அளவையும் படமாக வரைந்தனுப்பிய செய்தி சிலப்பதிகாரத்தில் உள்ளது. இவ்வாறு அடையாளம் காட்டி எழுதப்படுவது கண்ணெழுத்து எனப்படுகிறது.உதாரணமாக,

"வம்ப மாக்கள் தம் பெயர் பொறித்த கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதிக் கடைமுக வாயில்.."  என்றும்,

"கண்ணெழுத்தாளர் காவல் வேந்தன் மண்ணுடை
முடங்கலம் மன்னவர்க் களித்தாங்கு" என்றும் 

சிலப்பதிகாரம் கூறுகிறது. இன்றும் நாம் பிரயாணம் செய்யும் பொழுது
பெட்டிகள் மாறாமல் இருக்க எமது பெயரும் முகவரியும் அல்லது ஏதாவது அடையாளம் போடுகிறோம் அல்லவா, அதேபோல ஒன்றே கண்ணெழுத்து ஆகும். மேலும் கோலெழுத்து என்பது தென் இந்தியாவில் காணப்பட்ட பண்டைய எழுத்து முறையாகும். இது தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பாவிக்கப்பட்டது. இது மலையாளத்தில் மிகச் சமீப காலத்திலும், அதாவது கிட்டத்தட்ட கி. பி. 17 ஆம் நூற்றாண்டு வரையிலும் பயன்பாட்டில் இருந்துள்ளது. தற்போதும் இதன் குறிப்பிடத்தக்க பாவனை அங்குள்ளது. இன்னுமொரு கருத்து, "கோடு எழுத்துக்கள்" கொண்டவை கோலெழுத்து என விளக்குகிறது. திருக்குறளில்,

“எழுதும்கால் கோல் காணாக் கண்ணேபோல் கொண்கன் 
பழி காணேன் கண்ட இடத்து"--குறள் 1285

 இல்,மை தீட்டும் நேரத்தில் தீட்டும் கோலைக் காணாத கண்களைப்போல், என்ற வரி எழுது கோலை சுட்டிக் காட்டுகிறது.  

இவ்விரண்டு எழுத்து முறையிலும் எந்த அடிப்படை மாற்றமும் இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழன் எழுத்து கோல் கொண்டு எழுதினான் என்பதற்கும் இது சான்றாகிறது. இன்றும் பேனாவை எழுத்து கோல் என்றே அழைக்கின்றோம். சிந்து வெளி குறியீடுகள் , அதன் வீழ்ச்சிக்கு பின்பும் தொடர்ந்து பாவிப்பதை, இந்தியாவின்  முத்திரைக் காசுக்கள் எடுத்து காட்டுகிறது. முத்திரை காசுக்களும் அதற்கு இணையான சிந்து வெளி குறியீடுகளும் இணைக்கப் பட்டு உள்ளன. அதே போல,கி பி நாலாம் நூற்றாண்டைச் சேர்ந்த விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சி நகரின் ஒரு பகுதியான, சிறுகடம்பூரில் உள்ள  " திருநாதர் குன்று " என்னுமிடத்தில் கிடைத்த வட்டெழுத்தில் எழுதப்பட்ட சாசனமும் [கல் வெட்டும்] மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள சித்தன்னவாசல் பிராமி கல் வெட்டும் இணைக்கப் பட்டுள்ளது.  

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]

பகுதி:19  தொடரும்

0 comments:

Post a Comment