திருக்குறள்... -/130/-நெஞ்சொடு புலத்தல்

திருக்குறள் தொடர்கிறது

130. நெஞ்சொடு புலத்தல்

👉குறள் 1291:

அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சேநீயெமக் காகாதது.

மு. உரை:

நெஞ்சே! அவருடைய நெஞ்சம் ( நம்மை நினையாமல் நம்மிடம் வராமல்) அவர்க்குத் துணையாதலைக் கண்டும் நீ எமக்குத் துணையாகாதது ஏன்?

சாலமன் பாப்பையா உரை:

நெஞ்சே! அவருடைய நெஞ்சு நம்மை எண்ணாது அவருக்கே துணையாய் நிற்பதை அறிந்தும், நீ எனக்குத் துணை ஆகாமல் அவரையே நினைக்கக் காரணம் என்ன?

கலைஞர் உரை:

நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?

English Explanation:

O my soul! although you have seen how his soul stands by him, how is it you do not stand by me?

 

👉குறள் 1292:

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்

செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

மு. உரை:

என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!

சாலமன் பாப்பையா உரை:

என் நெஞ்சே! என்மீது அன்பு இல்லாதவரை உள்ளபடியே நீ அறிந்திருந்தும் நாம் போனால் அவர் கோபப்படமாட்டார் என்று எண்ணி நீ அவரிடமே செல்லுகின்றாய்!

கலைஞர் உரை:

நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே.

English Explanation:

O my soul! although you have known him who does not love me, still do you go to him, saying "he will not be displeased."

 

👉குறள் 1293:

கெட்டார்க்கு நட்டாரில் என்பதோ நெஞ்சேநீ

பெட்டாங் கவர்பின் செலல்.

மு. உரை:

நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்க்கு நண்பர் இல்லை என்னும் எண்ணமோ?

சாலமன் பாப்பையா உரை:

நெஞ்சே! நீ என்னிடம் இல்லாமல் உன் விருப்பப்படியே அவரிடம் செல்லக் காரணம், இந்த உலகத்தில் கெட்டுப் போனவர்களுக்கு நண்பர் இல்லை என்பதனாலோ?

கலைஞர் உரை:

நெஞ்சே! நீ எனை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவோ?

English Explanation:

O my soul! do you follow him at pleasure under the belief that the ruined have no friends?

 

குறள் 1294:

👉இனியன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே

துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

மு. உரை:

நெஞ்சே! நீ ஊடலைச் செய்து அதன் பயனை நுகர மாட்டாய்; இனிமேல் அத்தகையவற்றைப் பற்றி உன்னோடு கலந்து எண்ணப் போகின்றவர் யார்?

சாலமன் பாப்பையா உரை:

நெஞ்சே! நீ அவரைப் பார்க்கும்போது இன்பம் நுகர எண்ணுகிறாயே தவிர, அவர் தவறுகளை எண்ணி ஊடி, பிறகு உறவு கொள்ள எண்ணமாட்டாய். ஆதலால் இனி இது போன்றவற்றை உன்னோடு யார் ஆலோசனை செய்வார்? நான் செய்யமாட்டேன்.

கலைஞர் உரை:

நெஞ்சே! முதலில் ஊடல் செய்து பிறகு அதன் பயனைக் கூடலில் நுகர்வோம் என நினைக்க மாட்டாய்; எனவே அதைப்பற்றி உன்னிடம் யார் பேசப் போகிறார்கள்? நான் பேசுவதாக இல்லை.

English Explanation:

O my soul! you would not first seem sulky and then enjoy (him); who then would in future consult you about such things?

 

குறள் 1295:

👉பெறாஅமை அஞ்சும் பெறினபிரி வஞ்சும்

அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

மு. உரை:

( காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைத்து அஞ்சும்; ( இவ்வாறாக) என் நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது.

சாலமன் பாப்பையா உரை:

என் கணவர் என்னைப் பிரிந்து இருந்தபோது அவர் இல்லாததற்குப் பயப்படும்; அவர் வந்துவிட்டால், பிரிவாரே என்று பயப்படும். ஆகவே என் நெஞ்சம் நீங்காத துன்பத்தைப் பெற்றிருக்கிறது.

கலைஞர் உரை:

என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்.

English Explanation:

My soul fears when it is without him; it also fears when it is with him; it is subject to incessant sorrow.

 

👉குறள் 1296:

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்

தினிய இருந்ததென் நெஞ்சு.

மு. உரை:

காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது.

சாலமன் பாப்பையா உரை:

காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.

கலைஞர் உரை:

காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.

English Explanation:

My mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude.

 

👉குறள் 1297:

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாவென்

மாணா மடநெஞ்சிற் பட்டு.

மு. உரை:

காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன்.

சாலமன் பாப்பையா உரை:

தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத, என் நிலையில்லாத மடநெஞ்சோடு கூடி, நான் நாணத்தையும் மறந்துவிட்டேன்.

கலைஞர் உரை:

அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாது நாணத்தையும் மறந்து விட்டேன்.

English Explanation:

I have even forgotten my modesty, having been caught in my foolish mind which is not dignified enough to forget him.

 

👉குறள் 1298:

எள்ளின் இளிவாமென் றெண்ணி அவர்திறம்

உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

மு. உரை:

உயரின் மேல் காதல் கொண்ட என் நெஞ்சம், பிரிந்த காதலரை இகழ்ந்தால் இழிவாகும் என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது.

சாலமன் பாப்பையா உரை:

உயிர்மேல் காதலை உடைய என் நெஞ்சு, நாமும் அவரை இகழ்ந்தால் பிறகு நமக்கும் இழிவுவரும் என்று எண்ணி, அவர் வரவையும் கலவியையுமே நினைத்து நின்றது.

கலைஞர் உரை:

பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.

English Explanation:

My soul which clings to life thinks only of his (own) gain in the belief that it would be disgraceful for it to despise him.

 

👉குறள் 1299:

துன்பத்திற் கியாரே துணையாவார் தாமுடையநெஞ்சந் துணையல் வழி.

மு. உரை:

ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்?

சாலமன் பாப்பையா உரை:

ஒருவரது துன்பத்திற்குத் தாம் உரிமையாகப் பெற்றிருக்கும் தம் நெஞ்சமே துணையாகாதபோது, வேறு யார் துணையாவார்?

கலைஞர் உரை:

துன்பம் வரும்போது அதனைத் தாங்குவதற்கு நெஞ்சமே துணையாக இல்லாவிட்டால் பிறகு யார் துணையாக இருப்பார்?

English Explanation:

Who would help me out of one's distress, when one's own soul refuses help to one?

 

👉குறள் 1300:

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய

நெஞ்சம் தமரல் வழி.

மு. உரை:

ஒருவர்க்கு தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.

சாலமன் பாப்பையா உரை:

நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.

கலைஞர் உரை:

நமக்குரிய நெஞ்சமே நம்முடன் உறவாக இல்லாத போது, மற்றவர் உறவில்லாதவராக இருத்தல் என்பது எளிதேயாகும்.

English Explanation:

It is hardly possible for strangers to behave like relations, when one's own soul acts like a stranger.

திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….

 

✬✬✬அடுத்த பகுதியை வாசிக்க ... அழுத்துக...

 Theebam.com: திருக்குறள்... -/131/-புலவி: திருக்குறள் தொடர்கிறது … 131.

✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக

Theebam.com: திருக்குறள்/01/ : கடவுள் வாழ்த்து

0 comments:

Post a Comment