1980ல் அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள்

அவள் ஒரு ஜீவநதி - ஓடும் என்று நினைத்தோம்
கே.எஸ்.பாலச்சந்திரன்,எம்.ஏகாம்பரம், மாத்தளை கார்த்திகேசு,டீன் குமார்

கொழும்பில் கவின் கலை மன்றம் என்ற பெயரில் நாடகம் போட்ட்வர்கள் ஜே.பி.றொபேட், மாத்தளை கார்த்திகேசு, ராஜபாண்டியன் போன்றோர். இவர்கள் மேடையேற்றிய "பலே புறொடியூசர்" என்ற நாடகத்தில் நானும் நடித்தேன். இவர்களில் மாத்தளை கார்த்திகேசு ஒரு எழுத்தாளரும் கூட. இவர் தான் எழுதிய கதை ஒன்றை படமாக்க வேண்டுமென்ற ஆசையில் "அவள் ஒரு ஜீவநதி' என்ற தலைப்பில் படம் தயாரிக்கத் தொடங்கினார்.

ஜோ மைக்கேல் என்ற சிங்கள திரைப்பட இயக்குனர் முதலில் இயக்க ஆரம்பித்தார். பின்னர் ஜே.பீ.றொபேட் படத்தை தொடர்ந்து இயக்கிணார். டீன்குமார், ஏகாம்பரம்,பரினா லை, மாத்தளை கார்த்திகேசு, விஜயராஜா அகியோருடன் நானும் நடித்தேன்.கதையின்படி நான், டீன்குமார், விஜயராஜா மூவரும் நண்பர்கள். ஆனால் சந்தர்ப்பவசத்தால் நான் அவர்களுக்கு எதிரியாக மாறிவிட்டேன். விஜயராஜா பேசும் கூட்டத்தில் ஆள் வைத்து அவரை கல்லால் அடிக்கும் அளவிற்கு கதை போகிறது.

எனது அடியாளுடன் (சிதம்பரம்)

இந்தக் காட்சியை விஜயராஜா விட்டிற்கு முன்னால் உள்ள சந்தியில் தான் எடுத்தார்கள். நான் மெதுவாக என் அடியாளுக்கு 'சிக்னல்' கொடுக்க அவர் (சிதம்பரம் என்ற நடிகர்) கல்லால் எறிய, விஜயராஜா, இரத்தம் சொரிய சரிந்து விழவும் கூட்டம் திகைத்துப் போய்விட்டது. அது நடிப்புத்தான் என்று விளக்கவைக்க, படப்பிடிப்புக்குழுவினர் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது

எனக்கு கிடைத்த பாத்திரம் அசல் வில்லத்தனமானது. விட்டிலும், வெளியிலும் எதையும் கணக்கில் எடுக்காமல் எடுத்தெறிந்து பேசுபவன். மனைவி ஏதாவது சொன்னால் அதற்கும் குயுக்தியான பதில்தான் வரும். மனைவியாக நடித்தவர், சந்திராதேவி என்ற புதுமுகம். எனது உண்மையான சுபாவமே அப்படித்தான் என்று அவர் நினைத்திருப்பார் போலிருக்கிறது. அதனால் தானோ, என்னவோ படப்பிடிப்புவேளை தவிர என்னோடு பேச்சு ஒன்றும் வைத்துக் கொள்ளவில்லை. .

இதில் இன்னுமொரு விஷயத்தையும் குறிப்பிடவேண்டும்.'அவள் ஒரு ஜீவநதி' படப்பிடிப்பு கொழும்பில் நடந்த அதேகாலத்தில், நான் வி.பி. கணேசன் தயாரித்த ' நாடு போற்ற வாழ்க' படத்திறல் நடிப்பதற்காக் ஹப்புத்தளை, பண்டாரவளை போன்ற இடங்களிற்கு போகவேண்டி வந்தது. அங்கு படப்பிடிப்பு இல்லத தருணங்களில் கொழும்பு வந்து, 'அவள் ஒரு ஜீவநதி'யில் நடித்தேன். இரண்டு படங்களில் சமகாலத்தில் நடிக்கும் அனுபவம் இலங்கை தமிழ் நடிகர்களுக்கு வருவது மிகக்குறைவு.எனக்கு அதில் சந்தோசம்தான்.


மற்றப்படி, என்னுடைய காட்சிகளைத்தவிர மற்றைய காட்சிகளின் படபிடிப்புகளில் பார்வையாளனாகககூட கலந்துகொள்ளவில்லை. முழுக்கதையையும் கேட்கும் வாய்ப்புமிருக்கவில்லை. அனுபவம் உள்ள எழுத்தாளர் எழுதிய கதை திரையில் சிதைக்கப்பட்டது போல எனக்குப்பட்டது. விமர்சர்களும் அப்படியே கருதினார்கள். எனவே "அவள் ஒரு ஜீவநதி' பெரிதாக ஓடவில்லை.

நடிப்பில் டீன்குமார், விஜயராஜா ஆகியோருடன் எனது நடிப்பையும் விமர்சகர்கள் குறிப்பிட்டு பாராட்டினார்கள் பாதிரியாராக நடித்த திருச்செந்தூரனும் நன்றாக நடித்திருந்தார் என்று சொல்லப்பட்டது.

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் நன்றாகவிருந்தன. எம்.எஸ்.செல்வராஜாவின் இசையில், ஈழத்து இரத்தினம், மெளனகுரு, கார்த்திகேசு இயற்றிய பாடல்களை வி,முத்தழ்கு, கலாவதி, சுஜாதா, எஸ்.வி.ஆர்.கணபதிப்பிள்ளை, ஜோசெப் இராஜேந்திரன், தேவகி மனோகரன் ஆகியோர் பாடினார்கள்.

17.10.1980
ல் ஆறு இடங்களீல் "அவள் ஒரு ஜீவநதி' திரையிடப்பட்டது. கொழும்பில் செல்லமகால் திரையரங்கில் 22 நாட்கள் ஓடிய இத்திரைப்படம், மற்ற இடங்களில் குறைந்த நாட்களே ஓடின.
-அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் நாட் குறிப்பிலிருந்து..


மெல்ல மெல்லத் தமிழ்..


மெல்லத் தமிச் இனி வாசுமா? அல்லது அசிந்து ஒசியுமா?
மன்னிக்கவும். தமிழ்  சீர்திருத்தம் என்று கூறிக்கொண்டு '' என்ற எழுத்தை 'zh ' என்று இட்டு வாசித்ததால் இந்தக் கதி நேர்ந்தது மெல்லத் தமிழ்  இனிச் சாகும் என்பதற்குச் சான்றாகப் பலவிதமான காரணிகள் உள்ளன:

* வேறு மொழிகளில் உள்ள பலவிதமான ஒலிகளைக் குறிக்கும் எழுத்துகள் நம் தமிழ் மொழியில் இல்லாது இருந்தும், அதற்கான புது எழுத்துகளையோ, அல்லது குறிகளையோ உருவாக்கித் தமிழைச் செம்மைப்படுத்தாது, ஏற்கனவே இருந்த '' என்ற எழுத்திற்கு அழகு கூட்டுவதாகக் கூறிக்கொண்டு, வாசிப்பதை இன்னமும் சிக்கல் படுத்தி விட்டுள்ளனர். இதனால் தமிழில் உள்ள '' விற்கும்  'zh '' போட்டு எழுதி, தமிழ் தெரியாதோர் தமிழ் வாசித்தால் தமிழைத் தமிழ் என்றது வசிக்காது தமிச் என்று  வாசித்து தமிழின் பெயரையே தமிழர் கொன்றுவிட்டனர்.
* தமிழ் உணர்வினர் பலர் பெரு முயற்சிகள் எடுத்தும், தமிழ் வளர வேண்டிய தமிழ் நாட்டில் தமிழ் எப்பவோ சாகத் தொடக்கி விட்டது. அங்கு பெரும்பாலோரின் கல்வி, மற்றும் பேசும் மொழி ஆங்கிலமே. தொலைக்காட்சி நிகழ்ச்சிப் பெயர்கள், அவற்றைக் கொண்டு நடத்துவர் உரை எல்லாம் ஆங்கிலத்திலேயே. இளைய சமுதாயத்தினருடன் கதைக்கும் போது, அவர்களுக்கு  ஆங்கில மொழி பெயர்ப்பு அவசியமாகின்றது.
அப்படி மீறித் தமிழில்தான் கதைக்க வேண்டி வந்தாலும், ஒவ்வொரு வரிக்கும் so , and , but என்று எல்லாம் போட்டு இணைத்துக் கதைப்பது வழக்கமாய் விட்டது. தொலைக்காட்சியில் சில சொற்கள், songs , lyrics ,contestants , participants ,audiance , welcome , thank you என்று பல சொற்களுக்கு  என்ன தமிழ் வார்த்தையோ என்று இன்னமும் தேடிக்கொண்டு தான் இருக்கின்றேன்..
*வெளிநாடுகளிலும் தமிழ் மிகவும் கேவல நிலையிலேயே உள்ளது. பெரும்பாலும் பிள்ளைகள் தமிழைத்  தவிர மற்றைய மொழிகளைப் படிப்பதில் மிகவும் ஆர்வமுடையவர்களாக இருக்கின்றனர்இவர்களுக்கு,  தற்போது தமிழ் பேசுவது கஷ்டமாய் இருந்தாலும் விளங்கிக் கொள்கிறார்கள். ஆனால் வரும்காலத்தில், இவர்களின் குழந்தைகளுக்குத்  தமிழ் என்ற ஒரு மொழி இருப்பதாகவே கேள்விப்பட மாட்டார்கள்.

பாரதி தன் வாயாற் சொல்ல  அஞ்சியது உண்மையிலே நம் முன்னால் நடந்து கொண்டுதான்  இருக்கின்றது.
-ஆக்கம்:செல்வதுரைசந்திரகாசன்