சித்தர் சிந்திய முத்துக்கள்......3/67

***************************************************

சித்தர் சிவவாக்கியம் - 539

யோக சாடை காட்டுவார் உயரவும் மெழும்புவார்

வேகமாக அட்ட சித்து வித்தை கற்று நெட்டுவார்

மோகங் கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கிப் பின்

பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே.

மற்றவர்கள் தம்மை மதிக்க வேண்டும் என்று யோக சாடைகளை செய்து காட்டுவார்கள். தரையிலிருந்து உயரவும் எழுவார். வெகு வேகமாக சித்து விளையாட்டுக்களை கற்று அதனைச் செய்து வித்தைக் காட்டி வியப்படையச் செய்வார். இதனால் மாயையில் அகப்பட்டு காம ஆசையினால் மோகங் கொண்டு பெண்களில் சிற்றின்பத்தில் சிக்கிக் கொள்வார். அதன் பின் உண்மையான யோக ஞானத்தை இழந்து பெண்ணாசையால் பேய் பிடித்தவர் போல அலைந்து இப்பேருலகில் சாவார்கள். ஆகையால் சித்து வித்தைகளை விட்டு அவைகளில் நாட்டமில்லாது மெய்ஞானத்தில் நில்லுங்கள்.        

 

***************************************************

சித்தர் சிவவாக்கியம் - 540

காய காய முன்பதாகக் கண்டவர் மதித்திட

மாய வித்தை செய்வதெங்கு மடிப்பு மோசஞ் செய்பவர்

நேயமாக்கஞ் சாவடித்து நேரபிணியைத் தின்பதால்

நாயதாக நக்கி முக்கி நாட்டினில் அலைவரே            

காயகற்பம் உண்டு கல்ப தேகம் பெற்றதாக, கண்டவர்கள் மதிக்கும்படி சொல்லிக் கொள்வார்கள். கற்பத்தினால் மற்றவர் கண்களில் படாது மாயமாய் மறையலாம், ககன மார்க்கத்தில் எங்கும் பறந்து செல்லலாம் என்று ஜாலமாகிப் பேசி மோசமான காரியங்கள் செய்வார்கள். அன்பு மார்க்கத்தை சாகடித்து விட்டு எந்நேரமும் அபினியை காயகற்பம் என்று தின்பார்கள். அதனால் பைத்தியம் பிடித்து நாயைப் போல சாக்கடை நீர் நக்கி குடித்து நாட்டில் அலைவார்கள்.           

 

***************************************************

 சித்தர் சிவவாக்கியம் -541

நீரினில் குமிழியொத்த நிலையிலாத காயமென்று

ஊரினிற் பறையடித்து உதாரியாய்த் திரிபவர்

சீரினிற் உனக்கு ஞான சித்தி செய்வேன் பாரென

நேரினிற் பிறர் பொருளை நீளவுங் கைப்பற்றுவர்.                   

நீர்மேல் நிற்கும் குமிழியைப் போன்றது நிலையில்லாத உடம்பு இது என்று ஞானம் பேசி, தாங்களே அவதாரமாக வந்த உண்மையான குருவென்று ஊர் முழுவது பறையடித்து பிரச்சாரம் செய்து உண்மைப்பொருள் அறியாத உதாரியாய் திரியும் போலிக் குருவானவர் ஊரிலுள்ளோரை எல்லாம் அழைத்து ஞானம் பெற என்னிடம் உபதேசம் பெற்றுக்கொள்ளுங்கள். வெகு சீக்கிரத்தில் உங்களுக்கு ஞான சித்தியை நானே கொடுப்பேன் என அழைப்பு விடுத்து ஒவ்வொரு படியாக உபதேசம் பெறவேண்டும் எனக் கூறி அதற்கு நிகராக பிறர் பொருளை கட்டணம் என்று கட்டாயமாக வசூல் செய்து வாழ்நாள் முழுதும் நெடுக கைப்பற்றுவார்கள். இவர்களை கண்டு ஏமாறாதீர்கள்.

 

***************************************************

..அன்புடன் கே எம் தர்மா.

0 comments:

Post a Comment