விரும்பிடாப் பெண்டிர் கூடிடும் வாழ்வு

 

காதலில் வீழ்ந்தேன் கனவினில் வாழ்ந்தேன்

அவள் காலடி தொடர்ந்துசென்றேன்!

ஆதவன் போலவள் என் நெஞ்சினிலுறைந்தே

இரவிலும் ஒளி கொடுத்தாள்!

 

மான்விழி மங்கை என்விழி தங்கி  மனதிலும்

மகிழ் கொடுத்தாள்!

வான்வெளி பறந்தே யென் எண்ணங்களாலே

மாளிகை வடித்துவைத்தேன்!

 

காலங்களெல்லாம் கன்னியிவள் நினைவி லென் கடமைகள் கனமிழந்தேன்! 

மேளங்கள் முழங்க மலரவள் மனசின்

விருப்பினைக் வினாவி நின்றேன்!

 

சினம் கொண்ட புலியாய் சீறியே பாய்ந்தென்

இதயத்தை உடைத்து நின்றாள்!

மனமுடைந்து நானும் மாண்டிடில் நீயும்

மகிழ்வுடன் வாழாய் என்றேன்!

 

விரும்பிடாப் பெண்டிர் கூடிடும் வாழ்வும்

நரகத்தின் வாசல் என்றாள்!

ஒருவரியில்  வாழ்வின் கருமுழங்கியவள்

பெரும் குருவானாள்!

 

மயக்கமும் மறைய என் நெஞ்சமும் தெளிய

மீண்டும்   மீண்டே மண   வாழ்வில்,

சுயவிருப்புடனே ஒரு சுந்தரி வந்தே

தாயாயெனை  அணைத்து நின்றாள்!

 

-செ.மனுவேந்தன் 

0 comments:

Post a Comment