எம்மை நெருங்கும் புதுமைகள்/கண்டுபிடிப்புகள்

 அறிவியல் கண்டுபிடிப்புகள் (விஞ்ஞானம்)


👁ஊசிக்கு பதில் சொட்டு மருந்து...
தோள்பட்டையில் ஊசி போட்டுக்கொள்வதற்கே, நம்மில் பலர் பயப்படுவோம். ஆனால், வயதாவதால் வரும் ஒரு கண் நோய்க்குக் கண்களில் ஊசி போட வேண்டுமென்றால் நம்மில் எத்தனைப் பேர் உடன்படுவோம்? 'மேக்குலார் டீஜெனரேஷன்' என்ற இந்த நோய்க்கு இதுவரை இருந்த ஒரே தீர்வு, குறிப்பிட்ட இடைவெளியில் மருந்தை ஊசி வாயிலாக கண்களில் செலுத்துவது தான்.
விழித்திரையின் ஒரு பகுதி மேக்குலா. வயதாவதால் புதிய ரத்த நாளங்கள் தோன்றி, அவற்றிலிருந்து ரத்தம் கசிந்து, இப்பகுதி பாதிக்கப்படுகிறது. இதனால் பார்வை பறிபோகக்கூடும். அமெரிக்காவைச் சேர்ந்த இலினாய்ஸ் சிகாகோ  பல்கலை விஞ்ஞானிகள், ஊசிக்குப் பதிலாக சொட்டு மருந்து ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த மருந்தில், ஈபி - 3 என்ற ஒருவகை புரதம் இருக்கிறது. இதைத் தினமும் இரண்டு முறை எடுத்துக் கொள்வதன்வாயிலாக விழித்திரையில் ஏற்படும் சேதம் தடுக்கப்படுகிறது. இப்புரத மருந்து கண்களில் ஏற்படும் வீக்கம்,, ஆக்சிஜன் குறைபாடு ஆகியவற்றை நீக்கும் ஆற்றல் உடையது என்பது கூடுதல் சிறப்பு.


விழித்திரை சேதமான குரங்குகளுக்கும் எலிகளுக்கும், இந்த மருந்து இரண்டிலிருந்து மூன்று வாரங்கள் வரை தொடர்ந்து செலுத்தப்பட்டு ஆராயப்பட்டது. அவற்றிடம் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. கூடிய விரைவில் மனிதர்கள் பயன்படுத்தும் வகையில் இந்த மருந்து அறிமுகம் ஆகும்.

👩பெண்களுக்கு இதய நோய்கள்
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் துாக்கமின்மையால் அவதிப்படும் பெண்களுக்கு இதய நோய்கள் அதிகளவில் வருவதற்கு வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துஉள்ளது. ரத்த நாளங்களின் சுவர்கள் மேலுள்ள 'எண்டோதீலியம்' எனும் பூச்சு பாதிக்கப்படுவதால் இந்நிலை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


🥩கலோரி குறைத்தால் ஆரோக்கியம்
நாம் உண்ணும் உணவில் கலோரிகளைக் குறைத்துக் கொண்டு, பிற அத்தியாவசியமான வைட்டமின், தாதுக்களை எடுத்துக் கொள்வது தசைகளை வலிமையாக்கும்; முதுமையால் வரும் நோய்களைத் தடுக்கும் என்றும்சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

 அமெரிக்காவின் தேசிய உடல்நல பல்கலை மேற்கொண்ட ஆய்வில் விலங்கு களுக்கு கலோரி குறைவான உணவு தரப்ட்டு சோதனை செய்யப்பட்டது.

 சோதனையில் எதிர்ப்பார்த்த முன்னேற்றம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, மனிதர்களிலும் இவ்வாறான சோதனை செய்யப்பட்டது.

 சோதனையில் பங்கேற்றவர்களுக்கு அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவில் 25 சதவீத கலோரிகளைக் குறைக்குமாறு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அவர்களால் அதிகபட்சமாக 12 சதவீதம் வரைகுறைத்துக் கொள்ள முடிந்தது. 

இரண்டு ஆண்டு தொடர்ந்து நடந்த இந்த ஆய்வில், பங்கேற்ற அனைவரது உடல் ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. 

அவர்களின் தசைகள் வலிமை அடைந்ததோடு, முதுமையால் ஏற்படும் நோய்களுக்குக் காரணமான மரபணு மாற்றங்கள் குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை அடிப்படையாகக் கொண்டு நம் உண்ணும் உணவைச் சரியாக திட்டமிட்டு, கலோரி கட்டுப்பாடு செய்தால், உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

💪சிதைந்த தசைகள் மீண்டும் வளர...
நம் உடலில் உள்ள ப்ரோஸ்டாக்ளாடின் E2 எனும் புரதம், சிதைந்த தசைகள் மீண்டும் வளர உதவுகிறது. 15 - PGDH எனும் நொதி இந்தப் புரதத்தை அழித்துவிடுகிறது. எனவே, இந்த நொதியை கட்டுப்படுத்துவதன் வாயிலாக, வயதாவதால் வரும் தசை இழப்பை சரி செய்ய முடியும் என்று கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலை விஞ்ஞானிகள் கண்டறிந்துளனர்.

🗣சுலபமாகும் நீரிழிவு சோதனை..
ஒருவருக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா, இல்லையா என்பதை கண்டறிய பல்வேறு சோதனைகள் இருக்கின்றன. இவற்றைச் செய்வதற்கு ஆய்வு கூடங்களுக்கு சொல்ல வேண்டும். அதிக நேரமும் தேவைப்படும். 
ஆனால், வெகு சுலபமாக ஒருவருடைய குரலை வைத்து டைப் 2 நீரிழிவு நோய் இருக்கிறதா, இல்லையா என்பதைக் கண்டறியும் தொழில்நுட்பத்தை 'க்ளிக் லேப்ஸ்' எனும் சர்வதேச ஆய்வுக் கூடத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
 டைப் 2 நீரிழிவு நோய் ஏற்பட்டால், அது குரலை பாதிக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வாளர்கள் நீரிழிவு நோய் உள்ள 192 பேரையும், நோய் இல்லாத 75 பேரையும் ஆய்வுக்கு உட்படுத்தினர்.
 அவர்களுடைய குரல், பதிவு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு மென்பொருளின் உதவி கொண்டு ஆராய்ந்ததில், யாருக்கெல்லாம் நோய் உள்ளது என்று ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டது. 
இந்த முடிவு, பிற சோதனைகளின் முடிவுகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. இச்சோதனை முடிவுகள், 85 சதவீதம் சரியாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே இனிமேல் ஆய்வுக்கூடங்களைதேடி அலையாமல் வீட்டிலிருந்தபடியே, 10 வினாடிகள் குரல் சோதனையிலிருந்து, டைப் 2 நீரிழிவு நோயைக் கண்டு பிடித்து விடலாம்.

🎷காற்று மாசு ருவாக்கும்  புற்றுநோய்

அதிக அளவிலான காற்று மாசினால், மார்பக புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு கூடுவதாக, சமீபத்திய ஆய்வு கண்டுபிடித்துள்ளது. பல்வேறு வகையான புற்றுநோய்கள் இருந்தாலும், அவற்றில் மிகவும் அதிகமாக ஏற்படுவது மார்பக புற்று நோய் தான். 
இது ஏற்படுவதற்கு வயது, உடல் பருமன், அதீத மது பயன்பாடு, புகை பிடித்தல், மரபு என பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால், இவற்றையெல்லாம் மீறி, காற்று மாசு ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது என்று ஐரோப்பிய மருத்துவ சங்கம், ஸ்பெயினில் நடத்திய கூட்டத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள 2.5 மைக்ரான்களுக்கும் குறைவான அளவுடைய நுண்மாசுகள் பார்டிகுலேட் மேட்டர் என்று அழைக்கப்படுகின்றன.
 இவை காற்றிலிருந்து நம் நுரையீரலுக்குள் சென்று, அங்கிருந்து ரத்தத்தில் கலக்கின்றன. பின்பு மார்பு உள்ளிட்ட பகுதிகளில் தங்கி புற்றுநோயை ஏற்படுத்துகின்றன.
மிக முக்கியமான காற்று மாசுபடுத்திகளான இந்த நுண்மாசுகள் பெட்ரோல், டீசல், விறகு ஆகியவற்றை எரிக்கும் போது வெளியாகின்றன. வீட்டிற்குள்ளே செல்லபிராணிகள், காளான், சுத்தப்படுத்தும் பொருட்கள், புகையிலை, மெழுகுவர்த்தி ஆகியவற்றிலிருந்து இவை உற்பத்தியாகின்றன. ஆய்வாளர்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 2,984 பெண்களையும், பாதிக்கப்படாத 2,419 பெண்களையும் ஆய்வுக்கு உட்படுத்தினர்.
இதில் நுண்மாசுகள் கலந்த காற்றை சுவாசித்த பெண்களுக்கு மற்றவர்களை விட மார்பகபுற்றுநோய் வரும் வாய்ப்பு 28 மடங்கு அதிகமாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.


🥭குடல் நுண்ணுயிரிகளுக்கும் பழங்களுக்குமான தொடர்பு 
நம் உடலில் ஏராளமான நல்ல, தீய நுண்ணுயிரிகள் உள்ளன. நம் குடலில் வாழும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் பலவகைகளில் நமக்கு உதவுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம் நினைவாற்றல், உள்ளச் செயல்பாடுகள், மொத்த உடல் ஆரோக்கியம் இவை அனைத்தும் குடலில் வாழும் நுண்ணுயிரிகளோடு தொடர்புடையவை. நாம் பிறக்கும் போதே நம் தாயிடம் இருந்து இந்த நுண்ணுயிரிகள் நம் உடலுக்குள் வந்து விடுகின்றன. தவிரவும் நாம் உண்ணும் உணவில் இருந்தும் இவற்றைப் பெறுகிறோம்.
சமீபத்திய ஆய்வு ஒன்று பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள நுண்ணுயிரிகள், குடலில் தங்கி நமக்குப் பல நன்மைகள் செய்வதாகவும் கண்டறிந்துள்ளனர். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிராஸ் தொழில்நுட்ப பல்கலை 156 பழங்கள்,  காய்கறிகளை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது. அவற்றில் உள்ள அதே இன நுண்ணுயிரிகள் மனிதர்களின் குடலிலும் இருப்பது கண்டறியப்பட்டது. அதாவது இவை நாம் உட்கொள்ளும் பழங்கள் மூலமே நம் உடலுக்குள் புகுந்துள்ளன. இதன்மூலம் குடல் நுண்ணுயிரிகளுக்கும், நாம் உண்ணும் காய்கறி, பழங்களுக்குமான தொடர்பு முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நம் உடலில் 2.2 சதவீத நுண்ணுயிரிகள் பழங்கள், காய்கறிகள் மூலமே கிடைக்கின்றன. ஒவ்வொரு வகையான பழத்திலும் ஒவ்வொரு விதமான நுண்ணுயிரிகள் இருக்கின்றன. அவற்றை முறையாக எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் குடல் நுண்ணுயிரிகளை காத்துக் கொள்ளலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்து.

💮பூஞ்சைகளைக் கட்டுப்படுத்த...
சூரியகாந்தி தாவரத்தின் தண்டுகளில் இருந்து எடுக்கப்படும் வேதிப் பொருட்களைப் பழங்களில் வளரும் பூஞ்சைகளைக் கட்டுப்படுத்த, பயன்படுத்தலாம் என்று சீன அறிவியல் அகாடமியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

🤖சிறிய ரக ரோபோ
இங்கிலாந்தின் வாட்டர்லுா பல்கலை விஞ்ஞானிகள் தாவரங்களிலிருந்து எடுக்கப்படும் ஒருவித ஜெல்லைப் பயன்படுத்தி சிறிய ரக ரோபோக்களை உருவாக்கி உள்ளனர். இவற்றைப் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்குப் பயன்படுத்த முடியும்.

👀நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த... 
இன்சுலின் உருவாக்கும் செல்களை, கண்ணில் வைப்பது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் என்று சுவீடன் நாட்டைச் சேர்ந்த கே.டி.எச்., ராயல் தொழில்நுட்பக் கழக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


🧠மூளை நோயைக் கட்டுப்படுத்த ...
டாய் சீ (Taichi) என்பது ஒரு சீன தற்காப்புக் கலை. இதைக் கற்றுக்கொண்டு பயிற்சி செய்வதால் பார்கின்சன் மூளை நோயைக் கட்டுப்படுத்த முடிகிறது என்று ஐந்தாண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


✂தொகுப்பு:செ.மனுவேந்தன்>>>>>>science in tamil


0 comments:

Post a Comment