மனதால் இணைந்தோம்... & முகமூடிகள் (கவிகள்)

 

"மனதால் இணைந்தோம்

மணந்தே வாழ்வோம்"

"அனல் வீசிய தனிமை தொலைய

அன்பு கொட்டிய குளிர்மை சேர ...

அல்லி மலரும் மாலைப் பொழுதில்

அம்புலி நிலவு அழகு பொழிய ...

அக்கம் பக்கத்தார் வாழ்த்துக் கூற

அந்தணர் தவிர்த்து இருவரும் சேர்ந்தோம்!"

"மகர தோரணம் தென்றலில் ஆட

மகிழ்ச்சிக் கடல் பொங்கி வடிய ...

மங்கள இசை இனிமை கொட்ட

மனது இரண்டும் இன்பத்தில் மூழ்க ...

மன்றல் கமழும் மலர்மாலை அணிந்து

மனதால் இணைந்தோம் மணந்தே வாழ்வோம்!"

 

"முகமூடிகள்"

[அந்தாதிக் கவிதை]

"முகமூடிகள் கழறட்டும் அடையாளம் காட்டட்டும்

காட்டும் செயல்கள் வெளிப்படையாக இருக்கட்டும்

இருக்கும் பிரச்சனைகள் புரிந்து

 முடியட்டும்

முடியும் வேறுபாடுகள் நன்மையைக் கொடுக்கட்டும்

கொடுக்கும் எதுவும் பொதுநலம்

 ஆகட்டும்

ஆகிய காரியங்கள் எல்லோரும்

அறியட்டும்

அறிந்த தெளிந்த கொள்கைகளே நன்மையாகும்

நன்மை பயக்க உடையட்டும் முகமூடிகள்!"

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

அத்தியடி, யாழ்ப்பாணம்]

0 comments:

Post a Comment