திருக்குறள்.../37/-அவா அறுத்தல்

திருக்குறள் தொடர்கிறது


37. அவா அறுத்தல்

 

குறள் 361:

அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்

தவாஅப் பிறப்பீனும் வித்து.

மு. உரை:

எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை

எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.

கலைஞர் உரை:

ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்.

English Explanation:

(The wise) say that the seed, which produces unceasing births, at all times, to all creatures, is desire.


குறள் 362:

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டாமை வேண்ட வரும்.

மு. உரை:

ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை:

பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.

கலைஞர் உரை:

விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்கவேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்ப நிலை, ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்.

English Explanation:

If anything be desired, freedom from births should be desired; that (freedom from births) will be attained by desiring to be without desire.


குறள் 363:

வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லைஆண்டும் அஃதொப்ப தில்.

மு. உரை:

அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை.

சாலமன் பாப்பையா உரை:

எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் வேறு ஒன்று இல்லை; வான் உலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை.

கலைஞர் உரை:

தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை; வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம்.

English Explanation:

There is in this world no excellence equal to freedom from desire; and even in that world, there is nothing like it.

 

குறள் 364:

தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது

வாஅய்மை வேண்ட வரும்.

மு. உரை:

தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை:

மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்‌.

கலைஞர் உரை:

தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும் அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்.

English Explanation:

Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth.


குறள் 365:

அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்

அற்றாக அற்ற திலர்.

மு. உரை:

பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.

சாலமன் பாப்பையா உரை:

ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார்.

கலைஞர் உரை:

ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார் முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்.

English Explanation:

They are said to be free (from future birth) who are freed from desire; all others (who, whatever else they may be free from, are not freed from desire) are not thus free.

 

குறள் 366:

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை

வஞ்சிப்ப தோரும் அவா.

மு. உரை:

ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம்.

கலைஞர் உரை:

ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும் எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்.

English Explanation:

It is the chief duty of (an ascetic) to watch against desire with (jealous) fear; for it has power to deceive (and destroy) him.


குறள் 367:

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை

தான்வேண்டு மாற்றான் வரும்.

மு. உரை:

ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.

சாலமன் பாப்பையா உரை:

ஆசையை முழுவதுமாக அறுத்து ஒழித்து விட்டால், தான் விரும்பும் வண்ணமே அழியாமல் வாழ்வதற்கான செயல் உண்டாகும்.

கலைஞர் உரை:

கெடாமல் வாழ்வதற்குரிய நிலை, ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்கு, அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும்.

English Explanation:

If a man thoroughly cut off all desire, the deeds, which confer immortality, will come to him, in the path in which he seeks them.

 

குறள் 368:

அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல்தவாஅது மேன்மேல் வரும்.

மு. உரை:

அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.

சாலமன் பாப்பையா உரை:

ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.

கலைஞர் உரை:

ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்.

English Explanation:

There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more.


குறள் 369:

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்

துன்பத்துள் துன்பங் கெடின்.

மு. உரை:

அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.

சாலமன் பாப்பையா உரை:

ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.

கலைஞர் உரை:

பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்.

English Explanation:

Even while in this body, joy will never depart (from the mind, in which) desire, that sorrow of sorrows, has been destroyed.


குறள் 370:

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும்.

மு. உரை:

ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.

சாலமன் பாப்பையா உரை:

ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய சையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும்.

கலைஞர் உரை:

இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும்.

English Explanation:

The removal of desire, whose nature it is never to be satisfied, will immediately confer a nature that can never be changed.

 

திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….

 ✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக 


அடுத்த பகுதியினை வாசிக்க, அழுத்துக...
Theebam.com: திருக்குறள்...-/38/-ஊழ்: திருக்குறள் தொடர்கிறது …

0 comments:

Post a Comment