"அள்ளக் குறையாமல் ..." & "மனமும் மனிதனும்" & "களிப்பும் கடலானதே ..." & ''...காணாத புள்ளினம்"

 


"அள்ளக் குறையாமல் அன்பிருக்கு அத்தானே"

 

"அள்ளக் குறையாமல் அன்பிருக்கு அத்தானே

வெள்ளம் போல பாசம் அழைக்குதே

குள்ள நரிகளும் பின்னால் தொடருதே

வெள்ள மச்சான் துணைக்கு வாராயா?"

 

"கிள்ள கிள்ள குறையாத அன்பே

துள்ள துள்ள இன்பம் பெருகுதே

பள்ளிப் பருவத்தில் பின்னால் அலைந்தவனே

உள்ளம் துடிக்குதே காதல் மெய்யே?"

 

"இளந்தாரிப் பெடியனே கட்டிளம் காளையே

இளவட்டப் பொண்ணு காத்திருப்பது தெரியாதா

மேளம் கச்சேரி வைப்பமா கல்யாணத்துக்கு

தாளம் தப்பாமல் முத்தம் போடுவோமா?"

 

"பொய் பறையாதே கண்டு கனகாலம்

பொருத்தம் இருவருக்கும் அயத்துப் போனாயா

பொம்பிளை இங்கே காத்து நிக்குதே

பொறுத்தது போதும் சங்கதி சொல்லையா?"

 

 

"மனமும் மனிதனும்"

 

"மனமும் மனிதனும் போராடும் உலகில்

கானம் அழித்து சூழலைக் கெடுக்கிறான்

தானம் போட்டு இணையத்தில் பதிக்கிறான்

மானம் புரியாமல் மனிதநேயம் தேடுகிறான்!"

 

"மதி நுட்ப சிந்தனையாளனா மரத்துப்போனவனா

நெருக்கடி வந்தபின்பே மாற்றுவழி தேடுகிறானா

தொழில்நுட்பம் எம்மை அடக்கி ஆள்கிறதா

எண்ணம் குறுகியதா மனிதம் தோற்றதா?"

 

"உள்ளம் அலைபாயும் மனிதன் இவன்

நெஞ்சம் முழுக்க மெய்யும் பொய்யும்

மனது மாந்தனை உயர்த்தும் வீழ்த்தும்

மனிதனின் விருப்பம் பாசாங்கும் தேடும்!"

 

 

"களிப்பும் கடலானதே துளிப்பா காதலிலே"

 

"களிப்பும் கடலானதே துளிப்பா காதலிலே

ஒளிரும் அன்பிலே துள்ளுதே கவர்ச்சி

எளிய நடையும் அன்னநடை ஆகுமே

துளி துளியாய் கொட்டும் மழையிலே!"

 

"கள்ளி இவளின் இடை அழகில்

அள்ளி வீசுது கொள்ளை இன்பம்

உள்ளம் நாடுது கட்டி அணைக்க

வெள்ளம் போல பாசம் பொங்குதே!"

 

"விழிகள் இரண்டும் எதோ பேசுது

ஆழி முத்துக்களும் ஈர்ப்பு இழக்குது

தோழியாக்க மனது எனோ துடிக்குது

அழியாத உறவு இது ஒன்றே!"

 

 

"கால மாற்றத்தில் காணாத புள்ளினம்"

 

"கால மாற்றத்தில் காணாத புள்ளினம்

கோலம் வேறாக அழிந்த பண்பாடு

உலகம் சுருங்க தழைத்த இணையம்

ஓலம் வேண்டாம் உண்மை உணர்வாய்!"

 

"பச்சை வெளிகள் வறண்டு காயுது

நதிகள் உடைத்து நாட்டுக்குள் பாயுது

வானத்தில் கேட்ட  புள்ளுவம் காணோம்

வண்ணச் சிறகுகள் பறப்பது மறையுது!"

 

"காற்று கொடூரமாக வானம் வெறுமையாக

கருணை குறைவாக கானம் வெளியாக

காடுகள் அழிந்து கட்டிடங்கள் தோன்ற

கார்மேகம் கூட மாசு படுகுது!"

 

"பறவைகள் வாழ வழி தெரியவில்லை

உறவுகள் கூடிக்குலாவ கிளைகள் இல்லை

சிறகுகள் விரித்து பறப்பது எங்கே

இறப்பதை தவிர முடிவு வேறுண்டா?"

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

0 comments:

Post a Comment