காதலித்துப் பார்- கல்யாணம் கட்டிப்பார்



காதலித்துப் பார்...
காணுகின்ற கானல் நீரும்
புனல் நீராய் தெரியும் 
காணுகின்ற கனவும் 
நிஜமாகத் தெரியும் 
ஓடுகின்ற நாட்களும் 
நிமிடங்களாக தெரியும் 

காளையே  காதலித்துப் பார்...
கன்னியவள் வன்மொழியும் 
தேன் மொழியாய் கேட்கும்! 
கன்னியவள் பொய்யழகும் 
பட்டழகாய் தெரியும்! 
கன்னியவள் அதிர்நடையும் 
அன்ன நடையா  தெரியும்! 
கன்னியவள் ஏளன சிரிப்பும் 
புன்சிரிப்பாக புரியும்! 

காதலித்துப் பார்...
காணுகின்ற கானல் நீரும் 
புனல் நீராய் தெரியும்! 
காணுகின்ற கனவும் 
நிஜமாகத் தெரியும்!
 
கன்னியே காதலித்துப் பார்...
காளையவன் புழுகு மூட்டைகள் 
பொன் முட்டைகளாக தெரியும்
காளையவன் கடனட்டைகள் 
பெரும் புதையலாக தெரியும்
காளையவன் காமக் கண்கள் 
உன் காவலர்  போல் தெரியும்
காளையவன் வெறும் வேசங்கள் 
பாசமாக புரியும்

காதலித்துப் பார்...காதலித்துப் பார்...காதலித்துப் பார்..

------------
கல்யாணம் கட்டிப்பார்
காணுகின்ற புனல்நீரும் 
கானலென்று மறுப்பாய்
காணுகின்ற நிஜத்தினையும்
 நிழலென்று மறுப்பாய்!
ஓடுகின்ற நிமிடங்களும் 
நாட்களாக தெரியும் 

காளையே! 
 கல்யாணம் கட்டிப்பார்!
கன்னியவள் தேன் மொழியும்
 வன்மொழியாய் கேட்கும்! 
கன்னியவள் பட்டழகும் 
பொய்யழகாய் தெரியும்! 
கன்னியவள் அன்னநடை 
அதிர்நடை என்பாய்! 
கன்னியவள் புன்சிரிப்பு
 ஏளனமோ என்பாய்! 

கன்னியே!
கல்யாணம் கட்டிப்பார்,

காளைதரும் பொன்  மூட்டையும்
 பித்தளையாய்  தெரியும்! 
காளை தரும் பெரும்புதையல் 
விஷ விதைகளாக தெரியும்!  
காளையவன் காவல்  கண்கள்
 கரைச்சலாகத்   போல் தெரியும்! 
காளையவன் பாசம் வெறும்
 வேசமாகப்  புரியும்! 


கல்யாணம் கட்டிப்பார்கல்யாணம் கட்டிப்பார்கல்யாணம் கட்டிப்பார்!

-செ.மனுவேந்தன் 



0 comments:

Post a Comment