அறிவியல்=விஞ்ஞானம்
🌿உணவாகப் பாசி
'டக் வீட்' (Duck weed) என்பது
குளங்களில் வளரும் ஒரு விதமான பாசி. இதை தாய்லாந்து உள்ளிட்ட ஆசிய நாடுகளில் உணவாக
உண்பர். இதில் புரதச்சத்து மிகுதியாக உள்ளது. தற்போது ஐரோப்பாவிலும் இந்த உணவு பிரபலமாகி
வருகிறது.
🔥அமெரிக்காவின்
காட்டுத்தீ
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில்
உள்ள காடுகள் பூச்சி, நோய் தாக்குதல், காட்டுத்தீ ஆகிய பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது.
இதனால் மரங்கள் அழிந்து வருகின்றன. இந்தக் காடுகளால்உறிஞ்சப்படும் கார்பனை விட, வெளியிடப்படும்
கார்பனின் அளவு அதிகமாக உள்ளதாக உயிரியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
😋உணவுக்கும்,
துாக்கத்திற்கும் தொடர்புண்டா?
நாம் உண்ணும் உணவுக்கும் நம் துாக்கத்திற்கும் உள்ள தொடர்பைப் பற்றி புதிய ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஐ.ஐ.எஸ்., என்ற சர்வதேச அறிவியல் நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.
மொத்தம் 4,825 பேரின் உணவு முறையும், துாக்க முறையும் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. நம்முடைய உணவில் மாவுச்சத்து, பல வகையான கொழுப்பு, புரதம், நார்ச்சத்து ஆகியவை உள்ளன.
மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட நுண் சத்துக்களும் உள்ளன. ஒவ்வொரு சத்தும் துாக்கத்தை எப்படி பாதிக்கின்றன என்று கண்டறிவது தான் இந்த ஆய்வின் நோக்கம்.
ஆய்வின் முடிவில் புரதம், நார்ச்சத்து மிகுந்த உணவுகள் நல்ல நீண்ட நேரத் துாக்கத்தைத் தரும் என்றும், அதிகமான சோடியம் உள்ள உணவுகள் துாக்கத்தைப் பாதிக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.
கொழுப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடும் போது அடிக்கடி இரவில் துாக்கத்தின் இடையே எழுகின்ற சூழல் வருகிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
🫚சிகிச்சையில்
இஞ்சி
கனடா நாட்டைச் சேர்ந்த டொரன்டோ
பல்கலை மேற்கொண்ட ஆய்வில் இஞ்சியில் உள்ள ஃபுரானோடைனோன் (Furanodienone) எனும் சேர்மம்
குடல் அழற்சிக்கான சிகிச்சையில் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
🍄நோய்க்குக் காளான்
பீட்டாக்ளுகன்
(Beta-glucan) என்பது காளான் உள்ளிட்ட எல்லா பூஞ்சைகளிலும் காணப்படுகின்ற ஒரு சேர்மம்.
வைரஸ் காய்ச்சலால் ஏற்படும் நுரையீரல் நோய்களைச் சரிசெய்ய இந்தச் சேர்மம் உதவும் என்று
கனடா நாட்டைச் சேர்ந்த எம்.சி. ஹில் பல்கலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
🛌துாக்கமின்மையால்
வரும் புது பிரச்னை
உடல் ஆரோக்கியத்திற்கு உணவு எவ்வளவு அவசியமோ அதே அளவு அவசியமானது துாக்கம். சரியான துாக்கம் இல்லாதது மனப்பிரச்னைகளை உருவாக்கும் என்பதை நாம் அறிவோம். அதுபோக உடல்ரீதியாக என்னென்ன பிரச்னைகள் வரும் என்பது பற்றி பல்வேறு ஆய்வுகள் வந்தபடி உள்ளன.
தற்போது குவைத் நாட்டில் உள்ள டிடிஐ எனும் ஆய்வு மையம் துாக்கமின்மையால் ஏற்படும் ஒரு புதுப் பிரச்னையைக் கண்டறிந்துள்ளது.
ஆய்வாளர்கள், ஆரோக்கியமான உடல்வாகு கொண்ட 237 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். இவர்களை 24 மணி நேரம் விழித்திருக்கும்படி செய்தனர். இவர்கள் துாங்காமல் இருந்தபோது அவர்களுடைய உடலில் என்சிஎம் (நான் கிளாசிக் மோனோசைட்ஸ் - NCM) செல்கள் அதிகமாகி இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
அவர்களை வழக்கம் போல சாதாரணமாகத் துாங்கி எழச் சொன்னார்கள்.
அடுத்த இரண்டு நாட்களில் இந்த என்சிஎம் எண்ணிக்கை சராசரியானது. துாக்கமின்மையால் தொடர்ந்து அவதிப்படுபவர்களுக்கு இந்தச் செல்களின் எண்ணிக்கை அசாதாரணமாகவே இருக்கும்.
என்சிஎம் என்பவை ரத்த வெள்ளை அணுக்களில் ஒரு வகை. நம் உடலில் நோய் ஏற்படும்போது இவை பெருகும்.
கிருமிகளை எதிர்த்துப் போராடும். ஆனால் அநாவசியமான நேரங்களில் இவை பெருகுவது நல்லதல்ல. இவற்றின் எண்ணிக்கை நம் உடலில் தொடர்ந்து அதிகரித்தாலும் ஆபத்து.
இதனால் சாதாரண வயிற்று வலி, காய்ச்சலிலிருந்து சில விதமான புற்றுநோய்கள் வரை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
ஆகவே, தொடர் துாக்கமின்மை என்பது மிகவும் ஆபத்தானது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
வேலைச் சூழலில் ஏற்படும் மாற்றம், அதிக நேரம் கணினி உள்ளிட்ட டிஜிட்டல் திரைகளைப் பார்த்தல் ஆகியவற்றால் துாக்கம் கெடுகிறது.
எனவே ஆழ்ந்த உறக்கம் பெற இவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பது மருத்துவர்கள் கருத்து.
🍋மன அழுத்தம்
குறைக்கும் பழங்கள்
நம்முடைய குடல் ஆரோக்கியத்திற்கும்
மூளைக்கும், மன நிலைக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாகச் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நம் குடலில் வாழ்கின்ற சில
நல்ல நுண்ணுயிர்களால் மன அழுத்தத்தைச் சரி செய்ய முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வர்ட் பல்கலை மேற்கொண்ட ஆய்வில் ஆரஞ்சு முதலிய சிட்ரஸ் பழங்களைச்
சாப்பிட்டால் குடலில் உள்ள ஃபேசிகலிபாக்டீரியம் ப்ராஸ்நிட்சி (Faecalibacterium
prausnitzii) என்கின்ற ஒரு வகை குடல் பாக்டீரியா பெருகும் என்று தெரியவந்துள்ளது. சிட்ரிக்
அமிலம் அதிகம் கொண்ட பழங்கள் சிட்ரஸ் பழங்கள் எனப்படுகின்றன. திராட்சை, சாத்துக்குடி,
எலுமிச்சை, நார்த்தங்காய் ஆகியவை இந்த வகையில் வரும்.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
0 comments:
Post a Comment