திருக்குறள் ... -/108/-கயமை



திருக்குறள் தொடர்கிறது



108. கயமை

👉குறள் 1071:

மக்களே போல்வர் கயவர் அவரன்ன

ஒப்பாரி யாங்கண்ட தில்.

மு. உரை:

மக்களே போல் இருப்பார் கயவர், அவர் மக்களை ஒத்திருப்பது போன்ற ஒப்புமை வேறு எந்த இருவகைப் பொருள்களிடத்திலும் யாம் கண்டதில்லை.

சாலமன் பாப்பையா உரை:

கயவர் வெளித்தோற்றத்தில் மனிதரைப் போலவே இருப்பர்; விலங்கு பறவை போன்ற பிற இனங்களில் அவருக்கு ஒப்பானவரை நான் கண்டது இல்லை.

கலைஞர் உரை:

குணத்தில் கயவராக இருப்பர் ஆனால், நல்லவரைப் போலக் காட்டிக் கொள்வார் மனிதர்களிடம் மட்டும்தான் இப்படி இருவகையான நிலைகளை ஒரே உருவத்தில் காண முடியும்.

English Explanation:

The base resemble men perfectly (as regards form); and we have not seen such (exact) resemblance (among any other species).

 

👉குறள் 1072:

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்

நெஞ்சத் தவலம் இலர்.

மு. உரை:

நன்மை அறிந்தவரை விடக் கயவரே நல்ல பேறு உடையவர், ஏன் என்றால், கயவர் தம் நெஞ்சில் எதைப் பற்றியும் கவலை இல்லாதவர்.

சாலமன் பாப்பையா உரை:

நல்லது கெட்டதை அறிந்தவரைக் காட்டிலும் கயவர் செல்வம் உடையவர் ஆவர்; காரணம், கயவர் நல்லத கெட்டது என்ற கவலையே நெஞ்சில் இல்லாதவர்.

கலைஞர் உரை:

எப்போதும் நல்லவை பற்றியே சிந்தித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருப்பவர்களைவிட எதைப் பற்றியும் கவலைப்படாமலிருக்கும் கயவர்கள் ஒரு வகையில் பாக்கியசாலிகள்தான்!

English Explanation:

The low enjoy more felicity than those who know what is good; for the former are not troubled with anxiety (as to the good).

 

👉குறள் 1073:

தேவ ரனையர் கயவர் அவருந்தாம்

மேவன செய்தொழுக லான்.

மு. உரை:

கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.

சாலமன் பாப்பையா உரை:

தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் செய்து வாழ்வதால், கயவர் தேவரைப் போன்றவராவர்.

கலைஞர் உரை:

புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்.

English Explanation:

The base resemble the Gods; for the base act as they like.

 

👉குறள் 1074:

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்

மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.

மு. உரை:

கீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்.

சாலமன் பாப்பையா உரை:

தனக்கும் கீழாகத் தான் விரும்பியபடி எல்லாம் வாழும் நாய் போன்றவரைக் கண்டால் அவரைக் காட்டிலும் மேலாகத் தன் நிலையைக் காட்டி கயமை, இறுமாப்புக் கொள்ளும்.

கலைஞர் உரை:

பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவான குணமுடையோரைக் கண்டால், அவர்களைவிடத் தாம் சிறந்தவர்கள் என்ற கர்வம் கொள்வார்கள்.

English Explanation:

The base feels proud when he sees persons whose acts meaner than his own.

 

👉குறள் 1075:

அச்சமே கீழ்கள தாசாரம் எச்சம்

அவாவுண்டேல் உண்டாம் சிறிது.

மு. உரை:

கீழ் மக்களின் ஆசாரத்திற்கு காரணமாக இருப்பது அச்சமே, எஞ்சியவற்றில் அவா உண்டானால் அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.

சாலமன் பாப்பையா உரை:

கயவர்களிடம் நல்ஒழுக்கம் இருந்தால் ஆட்சியைப் பற்றிய பயமே காரணம் ஆகும். அதையும் மீறி அவர்கள் ஆசைப்படும் பொருள் கிடைப்பதாக இருந்தால் அதனாலும் கொஞ்சம் ஒழுக்கம் இருக்கும்.

கலைஞர் உரை:

தாங்கள் விரும்புவது கிடைக்கும் என்ற நிலையேற்படும்போது கீழ்மக்கள், தங்களை ஒழுக்கமுடையவர்கள் போலக் காட்டிக் கொள்வார்கள் மற்ற சமயங்களில் அவர்கள் பயத்தின் காரணமாக மட்டுமே ஓரளவு ஒழுக்கமுள்ளவர்களாக நடந்து கொள்வார்கள்.

English Explanation:

(The principle of) behaviour in the mean is chiefly fear; if not, hope of gain, to some extent.

 

👉குறள் 1076:

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட

மறைபிறர்க் குய்த்துரைக்க லான்.

மு. உரை:

கயவர், தாம் கேட்டறிந்த மறைப்பொருளைப் பிறர்க்கு வலிய கொண்டுபோய்ச் சொல்லுவதலால், அறையப்படும் பறை போன்றவர்.

சாலமன் பாப்பையா உரை:

தாம் அறிந்த ரகசியங்களைப் பிறரிடம் வலியச் சென்று சொல்லுவதால், அடிக்கப்படும் பறையைப் போன்றவர் கயவர்.

கலைஞர் உரை:

மறைக்கப்பட வேண்டிய இரகசியம் ஒன்றைக் கேட்ட மாத்திரத்தில், ஓடிச் சென்று பிறருக்குச் சொல்லுகிற கயவர்களைத், தமுக்கு என்னும் கருவிக்கு ஒப்பிடலாம்.

English Explanation:

The base are like a drum that is beaten, for they unburden to others the secrets they have heard.

 

👉குறள் 1077:

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்குங்

கூன்கையர் அல்லா தவர்க்கு.

மு. உரை:

கயவர் தம் கன்னத்தை இடித்து உடைக்கும் படி வளைந்த கை உடையவரல்லாத மற்றவர்க்கு உண்ட எச்சில் கையையும் உதற மாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:

தாடையை உடைக்கும் முறுக்கிய கை இல்லாதவர்க்குக் கயவர், தாம் உண்டு கழுவிய ஈரக் கையைக்கூட உதறமாட்டார்.

கலைஞர் உரை:

கையை மடக்கிக் கன்னத்தில் ஒரு குத்துவிடுகின்ற முரடர்களுக்குக் கொடுப்பார்களேயல்லாமல், ஈகைக் குணமில்லாத கயவர்கள் ஏழை எளியோருக்காகத் தமது எச்சில் கைகைக்கூட உதற மாட்டார்கள்.

English Explanation:

The mean will not (even) shake off (what sticks to) their hands (soon after a meal) to any but those who would break their jaws with their clenched fists.

 

👉குறள் 1078:

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோ கொல்லப் பயன்படும் கீழ்.

மு. உரை:

அணுகி குறைச் சொல்லுகின்ற அளவிலேயே சான்றோர் பயன்படுவர், கரும்புபோல் அழித்துப் பிழிந்தால் தான் கீழ்மக்கள் பயன்படுவர்.

சாலமன் பாப்பையா உரை:

இல்லாதவர் சென்று தம் நிலையைச் சொன்ன அளவில், சான்றோர் இரங்கிக் கொடுப்பர்; கயவர்களோ கரும்பைப் பிழிவதுபோல் பிழிந்தால்தான் கொடுப்பர்.

கலைஞர் உரை:

குறைகளைச் சொன்னவுடனே சான்றோரிடம் கோரி பயனைப் பெற முடியும்; ஆனால் கயவரிடமோ கரும்பை நசுக்கிப் பிழிவதுபோல், போராடித்தான் கோரிய பயனைப் பெற முடியும்.

English Explanation:

The great bestow (their alms) as soon as they are informed; (but) the mean, like the sugar-cane, only when they are tortured to death.

 

👉குறள் 1079:

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்வடுக்காண வற்றாகும் கீழ்.

மு. உரை:

கீழ் மகன் பிறர் உடுப்பதையும், உண்பதையும் கண்டால் அவர் மேல் பொறாமை கொண்டு, வேண்டும் என்றே குற்றம் காண வல்லவனாவான்.

சாலமன் பாப்பையா உரை:

பிறர் நன்கு உடுத்த, உண்ணக் கண்டால், அவர்மீத குற்றம் காணும் ஆற்றலை உடையவர் கயவர்.

கலைஞர் உரை:

ஒருவர் உடுப்பதையும் உண்பதையும் கண்டுகூட பெறாமைப்படுகிற கயவன், அவர்மீது வேண்டுமென்றே குற்றம் கூறுவதில் வல்லவனாக இருப்பான்.

English Explanation:

The base will bring an evil (accusation) against others, as soon as he sees them (enjoying) good food.

 

👉குறள் 1080:

எற்றிற் குரியர் கயவரொன் றுற்றக்கால்

விற்றற் குரியர் விரைந்து.

மு. உரை:

கயவர், எதற்கு உரியவர், ஒரு துன்பம் வந்தடைந்த காலத்தில் அதற்காக தம்மை பிறர்க்கு விலையாக விற்றுவிடுவதற்கு உரியவர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை:

தமக்கு லாபமோ நட்டமோ வரும் என்றால் தம்மைப் பிறர்க்கு அடிமை ஆக்குவர்; இதற்கு அன்றி வேறு எந்தத் தொழிலுக்குக் கயவர் உரியர் ஆவர்?

கலைஞர் உரை:

ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, தம்மையே பிறரிடம் விற்றுவிடுகிற தகுதிதான் கயவர்களுக்குரிய தகுதியாகும்.

English Explanation:

The base will hasten to sell themselves as soon as a calamity has befallen them. For what else are they fitted?

 

திருக்குறள் அடுத்த வாரம் தொடரும்….

✬✬✬அடுத்த பகுதியை வாசிக்க ... அழுத்துக...

 

✬✬✬ஆரம்பத்திலிருந்து வாசிக்க...அழுத்துக

Theebam.com: திருக்குறள்/01/ : கடவுள் வாழ்த்து 


0 comments:

Post a Comment