கடவுளின் பெயரால்.............[.சித்தர் சிவவாக்கியர் ]

கடவுளின் பெயரால் விக்கிரகங்கள் செய்து வைத்து வணங்குவதும்,
அவைகளுக்குத்  தினசரி பூசைகள், திருவிழாக்கள் செய்வதும் தொன்று
தொட்டு  நடந்து  வருபவை.  இவைகளையெல்லாம்  மூடப்பழக்கங்கள்
என்று  சாடுவதென்றால்  எவ்வளவு  துணிவு  வேண்டும்?  புனிதமான
அடிப்படைக்  கொள்கையையே  ஆட்டிப்  பார்ப்பதென்றால் அதனை
அறிந்து சொல்லும் பக்குவமும் வேண்டுமல்லவா?
     இங்கு உருவ வழிபாடு தவறா என்ற வினாவுக்கும் ஒரு விளக்கம்
தேவைப்படுகின்றது.
     ஆழ்ந்த அறிவில்லாத பாமர மக்களை ஒரு கட்டுக்கோப்பிற்குள்
கொண்டுவர,  நல்வழிப்படுத்த  உருவ  வழிபாடு  தேவைப்படுகின்றது.
சட்டத்துக்கும்,  சான்றோர்  உரைகளுக்கும்  கட்டுப்படாத   சிந்தைத்
தெளிவில்லாத  மனிதர்களுக்கு,  ஒரு  வடிவத்தைக்  காட்டி இதுதான்
கடவுள்,  இவர்  உனது பாவச் செயல்களைக் கண்காணித்து தண்டனை
தரக்  காத்திருக்கின்றார். ஆகவே  தவறு  செய்யாதே என்று கண்டிப்
போமானால்  அந்தக்  கட்டளைக்கு அவர்கள் பணிகிறார்கள். மனதில்
கடவுள்  கட்டளையை மீறி நடக்கக் கூடாது என்றும் நினைக்கிறார்கள்;
கடவுளின் கட்டளை என்று  சொல்லப்படும் வார்த்தைகளுக்குக் கட்டுப்
படுகிறார்கள். அதனால் உருவ வழிபாடும் ஒரு வகையில்
பயனாகிறதுபலரை  நல்வழிப்படுத்த  உதவுகிறது. இதனால் உருவ வழிபாடு
தவறல்ல என்று ஆத்திகர்கள் வாதிடுவர்.

     ஆனால், அறிவார்ந்த சித்தர்களோ இக்கருத்தை ஏற்றுக்கொள்வதில்லை.
உருவ  வழிபாடு ஒரு  மூட நம்பிக்கை. அதனால் மக்களிடம் அறிவு மயக்கம்
ஏற்படுகின்றது. எங்கும் நிறைந்த கடவுளைக் கல்லில் இருப்பதாகவும், செம்பில்
இருப்பதாகவும்,   மண்ணில்  இருப்பதாகவும்,    மரத்தில்   இருப்பதாகவும்,
உருவமைத்துக்    காட்டுவது    கடவுளையே   அவமதிப்பதாகும்   என்று
வாதிடுகின்றனர்.

     சித்தர்களின்  இந்தக்  கருத்தையொட்டியே சிவவாக்கியரும் மேற்கண்ட
வாறு  உருவ வழிபாட்டை எள்ளி நகையாடினார். கல்லில் கடவுளின் வடிவம்
செய்து  அதைப்  பல  பெயர்களால்  அழைப்பது  அறிவின்மைஅறிவற்ற
மூடர்கள்தாம்  இவ்விதம்  செய்வார்கள்.   உலகைப்   படைத்துக்   காத்து,
அழிக்கவும்  வல்ல  ஒரு  பொருள்  கல்லிலா  இருக்கிறது? இல்லை அந்தக்
கடவுளின்  வடிவம்  உள்ளத்தில் மட்டுமே இருக்கிறது. அதனை உள்ளத்தால்
அல்லவோ வழிபட வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றார்.

0 comments:

Post a Comment