நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?[பகுதி: 12B


[சீரழியும் சமுதாயம்] 

    
வரலாற்று ரீதியாக போதைப் பொருள் பாவனை பண்டைய காலத்தில் இருந்தே வந்துள்ளதை நாம், இலக்கியங்கள், இதிகாசங்கள் மூலம் அறிய முடிகிறது.உதாரணமாக ,கி மு 1800 ஆம் ஆண்டை அல்லது அதற்கும் முற் பட்ட சுமேரியன் துதி பாடல் [Sumerian Hymn to Ninkasi ] ஒன்று "மது" பெண் தெய்வமான, வாய் நிரப்பும் பெண்மணி என போற்றப்படும் நின்காசியையும் [Ninkasi]  பியர் மது பானம் [அல்லது பீர் / Beer]  வடித்தலுக்கான சேர்மானங்களையும் செய்முறையையும் பாராட்டுகிறது. உதாரணமாக, கடைசி இரண்டு வரியில்: 

"நியே உனது இரு கையாளும் சாராயத்துக்கான இனிக்கும் மாவூறலை [great sweet wort] வைத்து இருக்கிறாய் -அதை தேனுடனும் திராட்சை ரசத்துடனும் வடிக்கிறாய்"
"நின்காசி,வடி கட்டும் பெரும் மரத்தொட்டி ஒரு இன்பமான ஒலியை தருகிறது - நீ சேகரிக்கும் பெரும் மரத்தொட்டியில் [ large collector vat] சரியாக வைக்கிறாய்" என்கிறது.

மேலும் "குடிப்பவர்களிடம் ஒரு கவலையும் இல்லா பேரின்ப மனோ நிலையை ஏற்படுத்தக் கூடியதாக [a blissful mood… with joy in the [innards][and] happy liver] அதை நீ தயாரித்து எமக்கு அளிக்கிறாய்" என நின்காசியை புகழ்வதையும் காண்கிறோம். அடுத்ததாக,ரிக் வேதம் [1500-1000 கி மு] சோம பானத்தைப் பற்றி பாடுகிறது.உதாரணமாக, ரிக்வேதத்தில் ”, சோம, நீ  வரும் வழியில், இனிமையானதும்
 மகிழ்வுண்டாக்கும் வெள்ளம் தூய்மையாக பாய்கிறது, அதை இந்திரனின் பானத்திற்காக அமுக்கு "  [ In sweetest and most gladdening stream flow pure, O Soma, on thy way, Pressed out for Indra, for his drink.] என புத்தகம் [Rig-Veda, Book 9] 9 இல் பாடல் [HYMN
 I. Soma Pavamana] 1.1இல் பாடுகிறது. மேலும் மகாபாரதம் ,ராமாயணம் போன்ற இதிகாசங்களிலும் காண்கிறோம். உதாரணமாக, கம்பராமாயணம் / பால காண்டம் / உண்டாட்டுப் படலத்தில், கட்டிலில் விளையாடிக் கொண்டிருக்கும் கணவனுக்கும் மனைவிக்கும் அது கள்ளைப் போல் இனித்தது என கம்பர் "கலந்தவர்க்கு இனியது ஓர் கள்ளும் ஆய்" என்கிறார். இன்னும் ஒரு இடத்தில், வாள் போன்று ஒளி பொருந்திய நெற்றியுடையாள் ஒருத்தி தன்னை போலே அழகின் பெருமையை ஒத்திருக்கும் தனது நிழலை பொன்னால் செய்யப்பட்ட குளிர்ந்த மணமுள்ள மதுவுண்ணும் கிண்ணத்தில் கண்டு தோழியே! என்னோடு சேர்ந்து நீயும் இம்மதுவை உண்ணுவாய்! என்று வேண்டினாள் என கம்பர் "வாள் நுதல் ஒருத்தி காணா தடன் ஒக்கும் நிழலை பொன் செய் தண் நறுந் தேறல் வள்ளத்து உடன் ஒக்க உவந்து நீயே உண்ணுதி தோழி! என்றாள்" என்கிறார்.

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.” (குறள் 926) என்று கூறுகிறார் வள்ளுவர்.அதாவது, உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண் பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர் என்கிறார். கள் என்ற இந்த பானத்தை அதன் செய் முறையின் அடிப்படையில் பிழி, தேறல், அரியல், நறவு, மட்டு என்றும்  அழைப்பர். மேலும் சங்க இலக்கியத்தில், ஆண் பெண் இரு பாலாரிடமும், மது பானம் ஒரு முக்கிய பங்கு வகுத்ததை காண முடிகிறது. அது மட்டும் அல்ல, பெரும்பாணாற்றுப்படை [275-281] இல், மதுவின் செய்முறை விளக்கப்பட்டு இருப்பதுடன், பட்டிணப் பாலை [106 -110] இல், "துணைப்புணர்ந்த மடமங்கையர் பட்டு நீக்கித் துகிலுடுத்தும் மட்டு நீக்கி மது மகிழ்ந்தும் மைந்தர்கண்ணி மகளிர் சூடவும் மகளிர்கோதை மைந்தர் மலையவும்" என கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிரையும் காணலாம். மேலும் சித்தர் இலக்கியத்தில் கஞ்சா, அபின் போன்ற இன்றைய போதைப் பொருள்களும் பதிவு செய்யப் பட்டுள்ளதை காண்கிறோம்.

"அஞ்சாத கள்ளனடி ஆருமற்ற பாவியடி
நெஞ்சாரப் போய்சொல்லும் நேயமில்லா நிட்டூரன்
கஞ்சா வெறியனடி கைசேத மாகுமுன்னே
அஞ்சாதே யென்றுசொல்லி என் கண்ணம்மா
ஆண்டிருந்தா லாகாதோ"
[அழுகணிச் சித்தர் பாடல் 27]

கஞ்சா வெறியனடி என்ற வரி மூலம் ஒரு குறிப்பிட்ட மக்களால் சர்வ சாதாரணமாக பாவிக்கப்பட்டு வந்ததை நாம் அறிகிறோம். சமுதாயத்தில் ஏற்படும் ஓர் சில குற்றங்களுக்கும் போதை பொருள்களுக்கும் ஒரு குறிப்பிட்ட இணைப்பு உள்ளதும் தெரியவருகிறது, உதாரணமாக, சிறைச்சாலை கம்பிகளுக்கு பின் அடிக்கடி இருப்பவர்கள், அதிகமாக குற்றங்களை செய்யும் போது போதையில் இருந்துள்ளார்கள் என்பது தெரிய வருகிறது. மற்றும் சிலர் தங்கள் பழக்கங்களுக்கு, போதை பொருள் வாங்குவதற்க்காக, திருடுகிறார்கள் அல்லது வழி பறிப்பு செய்கிறார்கள். போதை பாவனையின் பக்க விளைவாக பெரும்பாலும் கடைகளில் தொடர்ந்து பணம் செலுத்தாமல் சாமான்களை தூக்கி செல்வது [shoplifting]  காணப் படுகிறது. எனவே போதை பொருள் பாவனை, தன்னையும், தன் குடும்பத்தையும் மட்டும் இன்றி சமுதாயத்தையும்  பாதிக்கிறது என நாம் கட்டாயம் கூறலாம்.

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்]
பகுதி: 13  தொடரும்
பகுதி 01 லிருந்து வாசிக்க அழுத்துங்கள்
Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா? [சீரழியும் தமிழ் ச...01A
பகுதி 13A  வாசிக்க அழுத்துங்கள்     
Theebam.com: நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?பகுதி: 13A

0 comments:

Post a Comment