அறிவியல்=விஞ்ஞானம்
👂காது இரைச்சல்
'டின்னிடஸ்' (Tinnitus) என்பது, வெளிப்படையான ஆற்றலோ, சத்தமோ இல்லாமல், காது அல்லது மண்டையில் ஒலிகள் கேட்பது போல் இருக்கும் நிலை. இந்த தொந்தரவுக்கு, திட்டவட்டமான சிகிச்சை இல்லை. சமீபத்திய ஆய்வு ஒன்று, மிகவும் வைட்டமின் சி, எ, மற்றும் பி கொண்ட பழங்கள், நார்ச்சத்து, பால் பொருட்கள், அதிகமாக இல்லாமல் காபி போன்றவை, டின்னிடசை தடுக்கக்கூடும் என்று கூறுகிறது.
📻'கேட்போர் வட்டம்'
குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே கேட்கும் வகையில், அல்ட்ராசோனிக் அலைகளை குவித்து அனுப்பக்கூடிய, 'கேட்போர் வட்டம்' (Audience Enclave) என்ற தொழில்நுட்பத்தை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த நுட்பம், பொது இடங்களில் ஹெட்போன்கள் இல்லாமல் தனிப்பட்ட முறையில், இசை, உரைகளை கேட்க உதவும்.
🚶மின்சாரத்தால் பிறந்த உயிர்கள்
இந்த பூமியில் உயிர்கள் எப்படித் தோன்றி இருக்கும் என்பது பற்றி மில்லர் யூரே மேற்கொண்ட ஆய்வு மிக முக்கியமானது. இந்த ஆய்வில் மின்சாரத்தைக் காற்று, தண்ணீர் ஆகியவை அடங்கிய கலத்திற்குள் அனுப்பிய போது, அமினோ அமிலம் உள்ளிட்ட சில உயிரியல் மூலக்கூறுகள் உருவாயின.
இதிலிருந்து மின்னல்கள் மூலமாக உயிர்கள் உற்பத்தியாகி இருக்கலாம் என்கின்ற கருத்து சொல்லப்பட்டது. ஆனால், இதை ஏற்றுக் கொள்வதில் பல பிரச்னைகள் எழுந்தன.
அமெரிக்க ஸ்டான் போர்ட் பல்கலை ஆய்வாளர்கள் உயிரினங்கள் உற்பத்தியாவதற்குத் தனித்த ஒரு மின்னல் காரணமாக இருக்காது, மாறாக 'மைக்ரோ லைட்னிங்' காரணமாக இருக்கலாம் என்று கூறி இருக்கின்றனர். காற்றில் தெளிக்கப்படும் போது தண்ணீர் துளிகளுக்கு இடையே ஒரு மின்னோட்டம் உருவாகிறது. இதுவே மைக்ரோ லைட்னிங் எனப்படுகிறது.
மில்லர் யூரே ஆய்வைச் சற்றே மாறுபட்ட வகையில் விஞ்ஞானிகள் செய்து பார்த்தனர். ஒரு கலத்தில் பூமியின் வளிமண்டலத்தில் இருக்கும் அத்தனை வாயுக்களையும் நிரப்பினர். இதற்குள் நீர்த் துளிகளைத் தெளித்தனர்.
அப்போது பெரிய நீர்த் துளிகள் நேர்மறை மின்ணூ ட்டத்தையும் சிறிய துளிகள் எதிர்மறை மின்ணூட்டத்தையும் பெற்றன. இவை நெருங்கும் போது இவற்றுக்கிடையே மிகச் சிறியளவில் மின்சாரம் (மைக்ரோ லைட்னிங்) உற்பத்தியானது.
இது சாதாரண கண்களுக்குத் தெரியாது என்பதால், உயர் தொழில்நுட்பம் உடைய கேமராக்களைக் கொண்டு பதிவு செய்தனர். இந்த மின்சாரம் காற்றில் படும்போது, உயிர் மூலக்கூறுகள் உற்பத்தியாயின.
எனவே இதே போலத் தான் உலகின் பல்வேறு இடங்களில் நீர்த் துளிகளிடையேயான மின்சாரத்தால் உயிர்கள் உற்பத்தியாகி இருக்க வேண்டும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
💚உயிர்களின் தோற்றம்
பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் கடல்கள் அனைத்துமே இன்று போல் நீல நிறத்தில் அல்லாமல் பச்சை நிறத்தில் இருந்ததாக ஜப்பான் விஞ்ஞானிகள் அனுமானித்துள்ளனர். அப்படியான பச்சை நிறக்கடலில் தான் உயிர்களும் தோன்றின என்று கூறியுள்ளனர்.
⊚எலி மோதிரம்
புதிதாக வந்திருக்கிறது 'ரிங் மவுஸ்' என்ற அணி கருவி (Wearable Gadget). இதை விரலில் மாட்டிக்கொண்டு, அசைத்தால், தொடுதிரையைத் தொடாமலேயே, மொபைல் திரையில் ஸ்க்ரோல், கிளிக், நேவிகேட் செய்யலாம்.
👛முந்திரி கழிவுகள்
முந்திரி கழிவுகள் உடல் பருமனை எதிர்க்க உதவும் என ஜப்பானின் சுகுபா பல்கலை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். முந்திரிப் பழச்சாறு, ஓடு ஆகிவை, உடலில் கொழுப்பு செல்கள் உருவாவதை தடுக்கின்றன. முந்திரிப் பழச்சாறு கொழுப்பு திரள்வதை குறைக்கிறது. முந்திரிப் பருப்பு சாற்றிலுள்ள அடிபோனெக்டின், ஆரோக்கியம் தரும் புரதத்தின் அளவை உயர்த்துகிறது.
🧅கை கொடுக்கும் வெங்காயம்!
சூரிய ஆற்றலை மின்சாரமாக மாற்றக்கூடியவை சூரிய மின் தகடுகள். இவை நீண்ட நேரம் சூரிய ஒளியில் வைக்கப்படுகின்றன. அப்போது சூரிய ஒளியுடன் சேர்ந்து புற ஊதாக் கதிர்களும் இவற்றின் மீது படுகின்றன. இதனால் இவற்றின் ஆயுட்காலம் குறைகிறது. எனவே சூரிய ஒளியை மட்டும் அனுமதித்து புறஊதாக் கதிர்களைத் தடுத்து நிறுத்தும்படியான படலங்களை, மின் தகடுகள் மீது பொருத்த வேண்டி உள்ளது.
தற்போது பெட்ரோலியப் பொருட்களில் இருந்து கிடைக்கும் படலங்கள் தான் பயன்படுகின்றன. ஆனால், இவற்றின் தயாரிப்பு, பயன்பாடு இரண்டுமே சுற்றுச்சூழலுக்கு தீங்கானவை.
எனவே சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத படலத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தார்கள்.
நெதர்லாந்து, பின்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தசில முக்கியப் பல்கலைக்கழகங்கள் இதற்குத் தீர்வு கண்டுள்ளன. தாவரங்களில் இருக்கும் நுண்ணிய செல்லுலோஸ் நார்களாலான 'நானோ செல்லுலோஸை' படலமாகப் பயன்படுத்தலாம். ஆனால், இதை அப்படியே பயன்படுத்த இயலாது.
எனவே, வெங்காயத்தாளில் இருந்து அந்தோசயனின் என்கின்ற ஒருவித சாயத்தை எடுத்தனர். இதை நானோ செல்லுலோஸ் உடன் கலந்து, ஒரு படலத்தை உருவாக்கினர்.
இதைப் புற ஊதாக் கதிர்களை வெளியிடக்கூடிய விளக்குக்கு முன்னால், 1,000 மணி நேரம் வைத்துச் சோதித்தார்கள். இந்தப் படலம் 99.9 சதவீதக் கதிர்களைத் தடுத்து நிறுத்தியது.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
0 comments:
Post a Comment