அறிவியல்=விஞ்ஞானம்
💻சிந்தனையால் கருவிகளை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம்
கணினிகளையும் கருவிகளையும் இயக்குவதற்கு உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம்தான், பிரெய்ன் கம்ப்யூட்டர் இன்டர்ஃபேஸ் (பி.சி.ஐ.) எனப்படும் மூளை கணினி இடைமுகம். போதாக்குறைக்கு, கணினிகளும் கருவிகளும், 'வியரபிள்' எனப்படும் அணி கருவிகளாகவும் மாறிவருகின்றன.
இதற்கு ஏற்றவகையில், மிகச் சிறிய பி.சி.ஐ., தொழில்நுட்பத்தை, அமெரிக்காவின் ஜார்ஜியா தொழில்நுட்ப நிலையம் மற்றும் தென் கொரியாவின் இன்ஹா பல்கலை ஆகியவற்றின் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். தலையில் பொருத்திக்கொண்டு வேகமாக ஒருவர் ஓடினாலும், குதித்தாலும்கூட, நிலையாக மூளையை படிக்கும் திறன் கொண்டதாக இந்தக் கருவி இருக்கிறது.
முந்தைய முயற்சிகளில், பெரிய தொப்பியில் மின்முனைகளை வைத்து இணைத்தனர். அல்லது அறுவை சிகிச்சை மூலம் மூளைக்குள் மின் முனை பட்டைகளை பதித்தனர்.
ஆனால், இந்த புதிய உணரியை, 'கிரெய்னோடமின்' எனப்படும், மண்டை ஓட்டின் சிறிய பகுதியை நீக்கி, மூளையின் மேற்பரப்பில் வைத்து, மூடினால் போதுமானது.
மென்மையாக, சிறியதாக, வளைந்துகொடுக்கும் தன்மை கொண்ட இந்த உணரி, மூளையின் மின் சமிக்ஞைகளை, அதாவது, மனித சிந்தனைகளை, மொழிபெயர்த்து, வெளியில் இருக்கும் கருவிக்கோ, கணினிக்கோ அனுப்புகிறது.
மனித மனத்துக்கும் இயந்திரத்திற்கும் இடையே தடையற்ற தொடர்பை உருவாக்குகிறது. எனவே, தட்டச்சோ, தொடுதிரையோ தேவையில்லை.
செயற்கை உறுப்புகளை இயக்குதல், மாற்றுத்திறனாளிகள் கணினிகளை, கருவிகளை இயக்குதல் போன்றவற்றுக்கு இந்த பி.சி.ஐ., உணரி மிகவும் உதவிகரமாக இருக்கும்.
🧣அதிக சிடி
ஸ்கேன்
அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலை மேற்கொண்ட ஆய்வில், அதிகமான முறை சிடி ஸ்கேன் எடுப்பதால் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
🛌பென்சோடியாசெபின்
துாக்கமின்மை, மன அழுத்தத்திற்கான மருந்துகளைத் தயாரிக்கும்போது, பென்சோடியாசெபின் எனும் வேதிப் பொருள் கழிவாகிறது. இது நீர் நிலைகளில் கலப்பதால், சாலமன் மீன்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன என்று ஆஸ்திரேலியாவின் க்ரிஃபித் பல்கலை தெரிவித்துள்ளது.
💧ஒவ்வொரு
துளியிலும்
விழுகிற ஒவ்வொரு மழைத்துளியிலிருந்தும் மின்சாரத்தை அறுவடை செய்யும் ஒரு புதிய நுட்பத்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சிறிய பிளாஸ்டிக் குழாய்களின் வலைப் பின்னல் மற்றும் மின்கடத்திகள் போன்ற எளிய அமைப்பைப் பயன்படுத்தி, மழைநீரிலிருந்து ஒரு டஜன் எல்.இ.டி., விளக்குகளை எரிய வைக்கும் அளவுக்கு மின்சாரத்தை உருவாக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் செய்து காட்டியுள்ளனர்.
🐛பூச்சி
ரோபோ
பல்வேறு வடிவங்களில், பறக்கும் ரோபோக்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவை தரையிறங்கும் போது சிரமப்படுகின்றன. இதைச் சரி செய்ய அமெரிக்காவைச் சேர்ந்த ஹார்வர்ட் பல்கலை ஆய்வாளர்கள் 'க்ரேன் ப்ளை' எனும் ஒருவிதமான பூச்சியின் கால்களைப் போல் ரோபோவின் கால்களை வடிவமைத்துள்ளனர்.
🔮வைரஸ்களை கொல்லும் மொச்சை
மனிதர்களிடையே பலவிதமான நோய்கள் ஏற்படுவதற்குக் காரணமாக இருப்பவை வைரஸ்கள். இவற்றை அழிப்பதற்கான மருந்துகள் மாத்திரை அல்லது ஸ்ப்ரே வடிவில் பயன்படுகின்றன. ஆனால் மூக்கு, தொண்டை ஆகிய பகுதிகளில் வைரஸ் தங்கிக் கொள்வதால் நாம் பயன்படுத்தும் மருந்து வேலை செய்யாமல் போகிறது. அதற்கான தீர்வை விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வந்தனர். அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த பென்சில்வேனியா பல்கலை முற்றிலும் வேறுபட்ட வகையில் ஒரு தீர்வைக் கண்டறிந்துள்ளது.
காய்ச்சல், சளி, நுரையீரல், சுவாசப் பிரச்னைகள் ஏற்படுத்தும் HSV-1, HSV-2, H1N1,
H3N2 வைரஸ்கள் சுலபமாக ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சூயிங்கம்மைப் பயன்படுத்தலாம் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
ஆங்கிலத்தில் லேப்லேப் பீன்ஸ் என்று அழைக்கப்படும் மொச்சையிலிருந்து இந்த சூயிங்கம் தயாரிக்கப்படுகிறது. மொச்சையில் இயல்பாகவே சில வகையான புரதச்சத்துக்கள் இருக்கின்றன. இவற்றை ப்ரில் (FRIL) புரதம் என்பர். மொச்சையைப் பொடியாக்கி சூயிங்கம் ஆகச் செய்தாலும் கூட, இந்த புரதமானது வேலை செய்யவும்.
மொச்சைப் புரதத்தால் ஆன சூயிங்கம்மைப் பரிசோதனை கூடத்தில் சோதித்துப் பார்த்தனர். வெறும் 15 நிமிடத்தில் 40 கிராம் புரதம் 95 சதவீத வைரஸ்களை அழித்துவிட்டது. இது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்தப் புரதமானது பறவைக் காய்ச்சல் ஏற்படுத்தும் வைரஸ்களைக் கூட அழிக்கவல்லது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே எளிமையான சூயிங்கம் கொடுத்து வைரஸ் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க முடியும்.
🔖ஏற்கப்படும் புரதம்
தாவரங்களில் உள்ள புரதம் மாமிசப் புரதத்தை விட தரம் குறைந்தது என்று நம்பப்பட்டது. ஆனால் சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த இலினொய்ஸ் பல்கலை மேற்கொண்ட ஆய்வில் இரண்டு வித புரதங்களையும் நம் உடல் ஒன்று போலவே ஏற்கிறது என்று தெரியவந்துள்ளது.
🎐ஹிமாலய காளான்
சீன பாரம்பரிய மருத்துவத்தில் நீண்ட காலப் பயன்பாட்டில் இருப்பது ஹிமாலய காளான். இதிலுள்ள கார்டிசெபின் எனும் வேதிப் பொருளை புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்த முடியும் என்று ஆக்ஸ்போர்ட் பல்கலை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
গஇறக்கை
ட்ரோன்
அதிவேகத்தில் இயங்கும் ட்ரோன்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்னை தரையிறங்கும்போது ஏற்படும் தடுமாற்றம் தான். தென்கொரிய நாட்டைச் சேர்ந்த பொஹாங் பல்கலை ஆய்வாளர்கள் பறக்கும் அணில்களைப் போல் இறக்கையுடன் கூடிய ட்ரோனை உருவாக்கி உள்ளனர். இவை தடுமாறாமல் தரையிறங்குகின்றன.
🧰மனநிலை காட்டும் கருவி தயார்
நோயாளிகள், தங்களை கவனித்துக் கொள்பவர்களிடம், தங்கள் எண்ணங்களை வெளிப்படையாக தெரிவிப்பதில்லை. பல சமயம் மருத்துவர்களிடமும் தெரிவிப்பதில்லை. இந்த நிலையை மாற்ற, பென்சில்வேனியா மாநில பல்கலை விஞ்ஞானிகள், ஒரு சிறிய கருவியை உருவாக்கியுள்ளனர். முகத்தில் ஒட்டிக் கொள்ளும் ஸ்டிக்கர் போன்ற இந்தக் கருவி, பல்வேறு உடலியல் சமிக்ஞைகளை பெற்று, உணர்ச்சி நிலைகளை அளவிடும்.
சுண்டு விரல் அளவுள்ள இந்த ஸ்டிக்கர், தோலின் அசைவு, உடல் வெப்பநிலை, வியர்வை மற்றும் ரத்தத்தின் ஆக்சிஜன் போன்றவற்றை அளவிடும் பல வகை உணரிகளை கொண்டுள்ளது. கூடவே, ஒரு சிலிக்கன் சில்லு, புளூடூத் சில்லு மற்றும் 5 -வோல்ட் பேட்டரி ஆகியவையும் உள்ளன. மிக மெல்லிய இந்த ஸ்டிக்கரை, முகத்தில் ஒட்டினால், தோலின் மாற்றங்களை கண்காணித்து, இந்தத் தரவை வயர்லெஸ் முறையில் ஸ்மார்ட்போனில் இருக்கும் ஒரு செயற்கை நுண்ணறிவு செயலிக்கு அனுப்பிவிடும்.
பின்னர், ஏ.ஐ., செயலி, நோயாளியின் தோல் மாற்றங்களை அலசி, மகிழ்ச்சி, பயம், வருத்தம், அல்லது கோபம் என்று அறிந்து தெரிவித்துவிடும். சோதனைகளின்போது, இந்த ஸ்டிக்கர் கருவி, ஆறு பொதுவான உணர்ச்சிகளை 96 சதவீத துல்லியத்துடன் அடையாளம் கண்டுள்ளது. படுத்த படுக்கையாக உள்ள நோயாளிகளை பராமரிக்க மட்டுமல்ல, உளவியல் மருத்துவர்களுக்கும் இந்தக் கருவி பயன்படும் என்கின்றனர் வல்லுநர்கள்.
தொகுப்பு:செ.மனுவேந்தன்
0 comments:
Post a Comment