மனிதர் பேராசை & "உயர்ந்திடு உயர்த்திடு....!"



மனிதர் பேராசை

 

பாதையிலே நடந்து சென்றவன்

பாசமுடன் பணம் வைத்தான்,

ஐயாயிரம் ரூபாயை வீதியில்

அறியாமல் கீழே விட்டான்.

 

தாலாட்டும் தென்றல் வந்து

தாளடிக்கும் நோட்டைக் கொண்டு,

ஆயிரம் ரூபாய் பறந்து சென்று

அறியாத ஓரம் சென்றது.

 

அந்த வேளையில் சிறுவன் வந்தான்,

ஆயிரம்எண்  நோட்டைக் கண்டான்,

"ஆஹா! இது என் அதிர்ஷ்டம்" என

அதைக் கையில் எடுத்துச் சென்றான்.

 

பின் வந்தாள் ஒரு சிறுமி,

பணக் கட்டு கண்டு மகிழ்ந்தாள்,

ஏற்கனவே வறுமையில் வாழ்ந்தவள்,

ஏழைகளில் ஒரு ஞாயிறு.

 

எண்ணிப் பார்த்தாள் நிதியை,

ஐயாயிரம் அல்லநான்காயிரம்!

"ஏன் குறைந்தது?" என்ற கவலையில்,

மீதமுள்ளதைத் தேடி நின்றாள்.

 

அவளின் மனம் நேர்மையாகும்,

ஆனால் ஆசை தலையெழுப்பும்,

"மீதமுள்ள பணமும் கிடைத்தால்,

என் வாழ்க்கை மாறும்!" என்பாள்.

 

அந்தச் சிறுவன் எடுத்த ஆயிரம்

அவனுள்  ஓர் இனிய மகிழ்ச்சி

மீதி தேடும் சிறுமிபோல்

ஊதி வளரும் பேராசையால்

மனிதர் வாழ்வும்  கெட்டது.  .

 

- மனுவேந்தன் .செ

 

"உயர்ந்திடு உயர்த்திடு....!"

 

"உயர்ந்திடு உயர்த்திடு பண்பைக் காத்திடு

உள்ளம் பூரிக்கும் செயலைச் செய்திடு

உடமை எல்லாம் பகிர்ந்து கொடுத்திடு

உதவிக்கரம் நீட்டி அன்பைக் காட்டிட்டு!"

 

"உடன்பட்டு உண்மை அறிந்து ஒற்றுமையாகிடு

உலகம் போற்றும் சமதர்மம் நாட்டிடு

உரிமை கொண்ட சமூகம் அமைத்திடு

உயர்ந்த கொள்கை என்றும் விதைத்திடு!"

 

"உயிரிலும் மேலாக ஒழுக்கம் வளர்த்திடு

உறவு நிலவும் நட்பைக் கொடுத்திடு

உதிரம் சிந்தா அமைதி வழங்கிடு

                       உன்னால் முடிந்ததை துணிந்து செய்திடு!"  

           

நன்றி:[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்] 


0 comments:

Post a Comment