விஞ்ஞானம் வழங்கும் விந்தை

அறிவியல்=விஞ்ஞானம்

 


🥭ஆரோக்கியம் தரும் பழங்கள்

பழங்களைச் சாப்பிடுவது நம்முடைய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பழங்களில் உள்ள சில சத்துகளைத் தனியாகப் பிரித்து அவற்றை மருந்தாகப் பயன்படுத்த முடியும். அவற்றுக்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அந்த வகையில், பிரேசில் நாட்டில், உள்ள எஸ்..ஆர்.சி., என்கின்ற ஆய்வு மையம் ஒரு முக்கிய ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வு வாயிலாக, பலவிதமான நாள்பட்ட நோய்களைத் தீர்க்கக்கூடிய தன்மை பெக்டின் எனும் நார்ச்சத்துக்கு உள்ளது தெரியவந்துள்ளது. இந்த நார்ச்சத்து பழங்கள் காய்கறிகளின் செல் சுவர்களில் நிறைந்துள்ளன. பப்பாளிப்பழம், தாட் பூட் எனப்படுகின்ற பேஷன் பழம், ஆரஞ்சு ஆகியவற்றில் இந்தச் சத்து அதிகமாக இருக்கிறது.

பப்பாளிப்பழம் பழுப்பதற்கு முன்பாக இந்த நார்ச்சத்து அதில் அதிக அளவில் இருக்கும். பழுத்துவிட்டால் இதனுடைய தன்மை மாறிவிடும். எனவே ஆய்வாளர்கள் பப்பாளியை விடுத்து ஆரஞ்சு, பேஷன் பழங்களை எடுத்துக் கொண்டார்கள். அவற்றின் சதைப்பகுதிக்கும் தோலுக்கும் இடையே இருக்கின்ற வெள்ளைப் பகுதியில் பெக்டின் நிறைந்துள்ளது.

இதை விலங்குகள் மீது பரிசோதித்தபோது, அவற்றின் உடலில் நல்ல மாற்றம் தெரிந்தது. வருங்காலத்தில் குடல் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்க இது பயன்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக ஆரஞ்சு முதலிய பழங்களில் சாறு எடுக்கும்போது சதைப் பகுதி வீணாகத் துாக்கி எறியப்படுகிறது. இதிலிருந்து பெக்டின் நிறைந்த வெள்ளைப் பகுதியை மட்டும் தனியாகப் பிரித்து எடுத்து மாவு போல் செய்யலாம்.

எனவே மருந்தாக மட்டும் இன்றி, இன்று நாம் பயன்படுத்துகின்ற புரோட்டின் பவுடர் போல் இந்த பெக்டின் மாவைப் பயன்படுத்த முடியும்.

 

👼இதயக் கோளாறுக் குழந்தை

ஒரு குந்துமணி அரிசியை விட சின்னதாக இருக்கும், பேஸ்மேக்கரை, அமெரிக்க நார்த்வெஸ்டர்ன் பல்கலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். உடலுக்குள் செலுத்தக்கூடிய இந்தக் கருவி, அதன் வேலை முடிந்ததும் கரைந்து, மறைந்துவிடும். இது இயங்குவதற்கு, நெஞ்சின் மீது அணியும் இன்னொரு கருவியிலிருந்து செலுத்தப்படும் ஒளி மட்டுமே போதும். இதயக் கோளாறுடன் பிறந்த குழந்தைகளுக்கு இந்த கருவி உயிர்காக்கும் சாதனமாகும்.

 

⌚அரை வைத்தியராகப் போகிறது ஆப்பிள் வாட்ச்!

மிக நேர்த்தியான கருவிகளை உருவாக்கும் ஆப்பிள் நிறுவனம், செயற்கை நுண்ணறிவை வீட்டு மருத்துவராக ஆக்க ஆயத்தமாகி வருகிறது. அண்மையில், ஒரு பெரிய உணரிகள் தொகுப்பைக் கொண்ட ஆப்பிள் வாட்ச்சின் மாதிரிப் படம் இணையத்தில் கசிந்தது. அந்த உணரிகள் எதற்கு என்று பலரும் தோண்ட ஆரம்பித்ததும், ஆப்பிளின் 'புராஜக்ட் மல்பெர்ரி' பற்றிய தகவல்கள் தெரியவந்தது. ஏற்கனவே, ஆப்பிள் தனது ஐபோன்களில், நடை வேகத்தை அளக்கும் பெடோமீட்டரிலிருந்து, சில உடல் நல செயலிகள் வரை அறிமுகப்படுத்தியிருந்தது.

தற்போது, ஆப்பிளின் 'ஹெல்த் ஆப்', இதயத் துடிப்பு, ரத்தத்தில் ஆக்சிஜன் செறிவு, எரிக்கப்பட்ட கலோரிகள் போன்ற அளவீடுகளின் சேகரிக்கும் டிஜிட்டல் பெட்டியாக உள்ளது. ஆனால், இந்த தரவுகளை வைத்து என்ன செய்வது என்பதை ஆப்பிள் சொல்லவில்லை. இப்போது, ஆப்பிள் வாட்ச்சில் இந்த மர்மமான சென்சார்களை வைத்திருப்பதன் மூலம், சேகரிக்கப்பட்ட தகவல்களை விளக்கி, பயனர்களை ஆரோக்கியமான பழக்க வழக்கங்களுக்கு தூண்ட ஆப்பிள் திட்டமிடுவது தெரிய வந்துள்ளது.

இதற்கு, ஹெல்த்+ என்ற செயற்கை நுண்ணறிவு மொழி மாதிரியைப் பயன்படுத்த ஆப்பிள் திட்டமிடுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவுக்கு, நிஜ மருத்துவர்களின் ஆலோசனைகளைக் கொண்டு பயிற்சியளிக்கப்படுகிறது. அந்த வல்லுநர்களையே விளக்க வீடியோக்களை உருவாக்கவும் ஆப்பிள் விரைவில் நியமிக்கலாம்.

அடுத்த இரு மாதங்களில் வருடாந்திர செயல்விளக்க கூட்டத்தை ஆப்பிளின் தலைவர் டிம் குக் நடத்தவிருக்கிறார். அதில், ஆப்பிள் வாட்ச்சை, செயற்கை நுண்ணறிவு கொண்ட தனிநபர் உடல் நலக் கருவியாகவும், உடற்பயிற்சி வழிகாட்டியாகவும் முன்வக்கப் போகிறார் என ஆப்பிள் வல்லுநர்கள் அடித்துச் சொல்கிறார்கள். அப்படி அறிமுகப்படுத்தினால், யாரும் இந்த மணிக்கட்டு டாக்டர் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே போகமாட்டார்கள் என ஆப்பிள் நம்புகிறது.


💚இதயம் பாதிக்கப்படாது

மாவுச்சத்தை குறைத்துக் கொண்டு அதற்கு பதிலாக புரதத்தையும் கொழுப்பையும் அதிக அளவில் எடுத்துக்கொள்ளும் உணவு முறைக்குப் பெயர் தான் கீடோ டயட். இதனால் பல்வேறு நன்மைகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்தன. இந்த உணவு உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அதிகரித்து, இதய நோயை உருவாக்கும் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் சமீபத்திய ஆய்வில், அமெரிக்காவைச் சேர்ந்த யூ.சி.எல்.., மருத்துவ ஆய்வு மையம் இந்த உணவு முறையால் இதயம் பாதிக்கப்படாது என்று கண்டறிந்துள்ளது.

 

🐶மரபணு திருத்தத்தால் திரும்ப வந்த ஓநாய்கள்!

கற்பனை கதைகளிலும், புதைபடிவங்களிலும் மட்டுமே பார்க்க முடிந்த, ஒரு மிருகம், 'டைர் வுல்ப்' எனப்படும் ஓநாய் வகை. கடைசியாக 'கேம் ஆப் த்ரோன்ஸ்' படத்தில், கிராபிக்ஸ் மூலம் இடம்பெற்று புகழ்பெற்ற இந்த ஓநாய், 10,000 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கக் கண்டத்தில் பனி யுகத்தில், ஊளையிட்டு, வேட்டையாடித் திரிந்த பயங்கர மிருகம்.

இப்பேர்ப்பட்ட ஓநாய், திடீரென திரும்ப வந்தால் எப்படி இருக்கும்? அந்த வித்தையை செய்து காட்டியிருக்கிறது உயிரித் தொழில்நுட்ப நிறுவனமான 'கொலோசல் பயோசயின்சஸ்.'

கொலோசலின் உரிமையாளர் பென் லாம் மற்றும் ஹார்வர்ட் பல்கலை மரபணுவியலாளர் ஜார்ஜ் சர்ச் ஆகியோர் 2024ன் இறுதியில், அழிந்துபோன உயிரினங்களை 'மீண்டும் உயிர்ப்பிக்கும்' துணிச்சலான நோக்கத்திற்காக, ரோமுலஸ் மற்றும் ரெமுஸ் ஆகிய குட்டிகளை ஆய்வுக்கூடத்தில் 'பிரசவித்து' காட்டினர்.

அவை, “குரூர ஓநாய் போன்ற பண்புகளைக் கொண்ட, மரபணு திருத்தம் செய்யப்பட்ட ஓநாய்கள்என்று இருவரும் ஒப்புக்கொண்டனர். ஆனால் டைர் வுல்ப் வகை ஓநாய்கள், உண்மையில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே, பரிணாம வளர்ச்சியின்படி, சாம்பல் நிற ஓநாய் வகையிலிருந்து விலகி வந்த வேறு இனம் என்கிறது, 2021இல் வெளிவந்த ஒரு மரபணு ஆராய்ச்சி.

சினிமாவில் பிரபலமான, ஓநாயை உருவாக்குவதற்காக, கிரிஸ்பர் (CRISPR) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பழங்கால ஓநாய் புதைபடிவங்களிலிருந்து, மரபணுக்களை எடுத்துத் திருத்தி, ஒரு ஒப்பனை ஓநாயை உருவாக்கியிருக்கிறார்கள் என்று சில விஞ்ஞானிகள் விமர்சிக்கின்றனர்.

கொலோசலின் திட்டம், அழிந்த உயிரினங்களை மீட்டெடுப்பது அல்ல, மரபணுத் தொழில்நுட்பத்தால் எதுவும் செய்ய முடியும் என்று மார்தட்டுவதுதான் என்றும் விமர்சகர்கள் சொல்கின்றனர்.

 

தொகுப்பு:செ.மனுவேந்தன்

0 comments:

Post a Comment